நெல்லை: வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கூடுதல் பார்வையாளர் அனுமதி
நெல்லை: நெல்லை தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கூடுதல் பார்வையாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது. அவர்கள் இன்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நடந்தது. தேர்தலில் பணம், தில்லுமுல்லுகளை தடுக்க மத்திய தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்தது.
நெல்லை லோக்சபா தொகுதிக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மனோஜ்குமார், தென்காசி லோக்சபா தொகுதிக்கு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விவேக் பிரதாப் சிங் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்தது.
வாக்கு பதிவு முடியும் வரை தொகுதிகளில் முகாமிட்டிருந்த தேர்தல் பணியாளர்கள் பின்னர் தங்கள் பணியாற்றும் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 16ம் தேதி நடப்பதை முன்னிட்டு பொது தேர்தல் பார்வையாளர்கள் இருவரும் இன்று நெல்லை வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை தொகுதி லோக்சபா தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மூன்று கட்டிடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு பல மீட்டர் தூரம் இருக்கிறது. இவற்றை கண்காணிக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் குப்தா கூடுதல் பொது தேர்தல் பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நெல்லைக்கு வந்து கலெக்டருடன் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தென்காசி தொகுதிக்கான மையமான குற்றாலம் பராசக்தி கல்லுரியிலும், நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.