தேமுதிக வருதோ இல்லையோ... கி.வீரலட்சுமி வந்துவிட்டார் மக்கள் நலக் கூட்டணிக்கு!
சென்னை: நான்கு கட்சிகளின் கூட்டணியான மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப்படை நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் கி.வீரலட்சுமி இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று தனது அமைப்பின் நிர்வாகிகளோடு சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. அப்போது எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக வைகோவிடம் உறுதி அளித்தனர் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர்.
ஏற்கனவே நடிகை குஷ்புவை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக கி.வீரலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் நலக் கூட்டணிக்கு இவர் வந்துள்ளதால் குஷ்பு போட்டியிட்டால், அவரை எதிர்த்து வீரலட்சுமி நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிகவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி இந்த நிலையில் கி.வீரலட்சுமி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழர் முன்னேற்றப்படைமக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவுஇன்று (22.03.2016) காலை 11 மணி அளவில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர்...
Posted by Vaiko onTuesday, March 22, 2016
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று (22.03.2016) காலை 11 மணி அளவில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி அவர்களும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் நா.கணேசன், தலைமை நிலையச் செயலாளர் முனியன், காஞ்சி மாவட்டச் செயலாளர் இர.ரஞ்சித், நெல்லை செல்வம், மகேந்திரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்திதார்கள்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், அதன் வெற்றிக்காக இணைந்து பணியாற்றுவதாகவும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் உறுதி அளித்தார்கள்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொதுச்செயலாளருமான வைகோ தமிழர் முன்னேற்றப்படை நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர் என்று வைகோ கூறியுள்ளார்.