தமிழக சட்டசபை கூட்டம் 24 நாட்கள் நடைபெறும்.... அனல் பறக்கும்!
ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் ஜூன் 14 முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை தவிர்த்து மொத்தம் 24 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் பல்வேறு துறைகளில் மானியாக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
ஆய்வு குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால் விடுமுறை தினங்கள் நீங்கலாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் 24 நாட்கள் நடைபெறும் என்று கூறினார்.
எந்தெந்த நாட்களில் என்னென்ன துறை மீதான விவாதம் நடைபெறும் என்றும் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
ஜூன் 14 ஆம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மீது விவாதம் நடைபெறும் என்றார். 15 ஆம் தேதி கல்வித்துறை,
16ஆம் தேதி கூட்டுறவு துறை மீதான விவாதம் நடைபெறும் என்றார்.
ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். 10ஆம் தேதி முதல்வர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றார்.
தொடர்ந்து மீன்வளம், கால்நடைத்துறை, வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றார்.
பேரவையில் ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தமிழக சட்ட சபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23ஆம்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அதை தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதன் பிறகு, மார்ச் 16ஆம்தேதி சட்டசபை கூடியது. அன்று 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் 4 நாட்கள் வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்ததைத் தொடர்ந்து, சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் முடிவுற்றதும் தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம். ஆனால், மானியக் கோரிக்கை மீதான நிகழ்வுகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. எதிர்கட்சிகள் வலியுறுத்தலை அடுத்து மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 நாட்கள் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் தவிர அதிமுக எம்எம்ஏக்களை பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவார்கள் என்பதால் சட்டசபையில் அனல் பறக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.