சர்ச்சைக்குரிய 2 எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு தமிழக அரசு தடை!
சென்னை: ஜாதிய அடிப்படையில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய 2 எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழக அரசு தடை செய்துள்ளது.
இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கெஜட் விவரம்:

வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? என்ற புத்தகத்தை கே.செந்தில் மள்ளரும்
குழந்தை ராயப்பன், "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர். இந்த நூல்களை மள்ளர் மீட்புக் கழகம் மற்றும் ஆதித் தமிழர் பேரவை ஆகியவை வெளியிட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களில் ஜாதிகள் பற்றிய கருத்துகள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், அதனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்றும் அரசு கருதுகிறது.
இதனால் இந்த புத்தகங்கள் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள செந்தில் மள்ளர், மள்ளர் மீட்புக் கழகத்தின் மாநாடு வரும் 29-ந் தேதி விருதுநகர் அருகே சாத்தூரில் நடைபெற உள்ளது. இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2013ஆம் ஆண்டு மள்ளர்- மீண்டும் பாடிய வரலாறு என்ற செந்தில் மள்ளரின் நூல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications