ரயில் சரக்கு பெட்டி பற்றாக்குறையால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பு... ஓ.பி.எஸ்
சென்னை: ரயில் சரக்கு பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகத்தில் நிலவும் மின் உற்பத்தி பாதிப்பை தடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் , சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதம் விபரம்...

முழு மின் உற்பத்தி இல்லை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 3 மின் உற்பத்தி அலகுகள் வடசென்னை வள்ளூர் பகுதியில் அமைந்து வர்த்தக ரீதியான செயல்பாட்டில் உள்ளது. இது 1500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டது. ஒரிஸா மாநிலம் தல்சேர் -ல் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கத்திலிருந்து குறைவான அளவே நிலக்கரி பெறப்படுவதன் காரணமாக மின் உற்பத்தியினை முழுமையாக செயல்படுத்த இயலவில்லை.

சரக்கு பெட்டிகள் பற்றாக்குறை
தேவையான அளவிற்கு ரயில்வே துறையில் சரக்குப் பெட்டிகள் போதுமான அளவில் பயன்பாட்டிற்கு கிடைக்காதுதான் இதன் அடிப்படை காரணம் . தல்சேரியிலுள்ள நிலக்கரி சுரங்கத்திற்கு போதுமான அளவு ரயில்வே காலிப் பெட்டிகளை ரயில்வே அமைச்சகம் வழங்கவில்லையென்று தெரிகிறது.

மின் உற்பத்தி நிறுத்தம்
இதனால் தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியில் இயங்கிவரும் 3 மின் உற்பத்தி அலகுகளில் 1 அலகு செயல்பட இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே கோடை காலங்களில் தேவைப்படும் மின் தேவையினை பூர்த்தி செய்ய முடியவில்லை.

தனி கவனம் செலுத்த வேண்டும்
இதில் தனிக் கவனம் செலுத்தி தேவையான காலி ரயில் சரக்குப் பெட்டிகளை நிலக்கரி அனுப்பும் பயன்பாட்டிற்கு அளிக்க உத்தரவிடுமாறும், மேலும் மின் உற்பத்தியினை முழுமையான அளவிற்கு உற்பத்தி செய்திட உதவிடுமாறும் ஓ.பன்னீர்செல்வம் ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications