கரகாட்டக்காரி... ஈவிகேஎஸ் இளங்கோவனின் கேவலமான விமர்சனம்.. தமிழிசையின் பெருந்தன்மை!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கரகாட்டக்காரி மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டக்காரி என விமர்சித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆனால், ஊடகங்கள் தன் பேச்சை மாற்றி போட்டு விட்டதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை என்றும் தன்மீதான குற்றச்சாட்டை ஈவிகேஎஸ் மறுத்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மோடி சந்தித்ததை விமர்சித்து அவர் கூறிய கருத்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஈவிகேஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த விவகாரம் சற்று சூடு குறைந்த நிலையில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணியை தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார் ஈவிகேஎஸ். அதோடு எம்.எல்.ஏ. ஒருவரை சாதிப்பெயரை கூறி திட்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கரகாட்டக்காரி என விமர்சித்ததாக புதிய பிரச்சினையில் சிக்கியுள்ளார் ஈவிகேஎஸ்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் சில தினங்களுக்கு முன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அரசியல் உள்நோக்கத்தோடு பாஜக இந்த வழக்கை ஜோடிப்பதாகக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அந்தவகையில், மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் தலைமை தாங்கினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கரகாட்டக்காரி என்றும் பொய்க்கால் குதிரை ஆட்டக்காரி என்றும் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
ஈவிகேஎஸ்-ன் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தி நியூஸ் மினிட்டிற்கு தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டியில், "ஈவிகேஎஸ்-ன் இந்தப் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எங்கள் கட்சியினருக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். நாங்கள் தற்போது வெள்ள நிவாரணப் பணிகல் மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்து இது போன்ற பேச்சுக்களால் ஈவிகேஎஸ் தன் மரியாதையை தானே குறைத்துக் கொள்கிறார். ஏற்கனவே அவர், தனது கட்சிக்காரர்களையே இவ்வாறு தரக்குறைவாகப் பேசியவர் தான். எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அவர் கிராமியக் கலைஞர்களை அவமானப் படுத்துகிறாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன் மீதான இந்தப் புதிய குற்றச்சாட்டு குறித்து ஈவிகேஎஸ் கூறுகையில், "சில ஊடகங்கள் என் பேச்சை இவ்வாறு தவறாக சித்தரித்து விட்டனர். கிராமியக் கலைஞர்கள் எப்படி மேடையில் ஒரே மாதிரியான ஜோக்கைச் சொல்வார்களோ, ஒரே மாதிரி ஆடுவார்களோ அதேபோன்று பாஜக-வும் காங்கிரஸ் மீது தொடர்ந்து ஒரே மாதிரியாக குற்றம் சாட்டி வருகிறது என்றே கூறினேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அவ்வாறுக் கூறவில்லை" என இவ்வாறு தன் பேச்சுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.