தேர்தல் பாதுகாப்புக்கு 20 ஆயிரம் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை: ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பெனி துணை ராணுவப் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் வீரர்கள் வருகிற மே மாதம் தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையிலான அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன. இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. இதற்கான முகாம் வரும் 25-ம் தேதி முதல், ஏப்ரல் 5-ம் தேதி வரை நடக்கிறது.
தமிழக அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டைகளை தொடர்ந்து வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அதே போல் மருத்துவ சேவைகள் கழகம் மூலம், அத்தியாவசிய தேவைகளுக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் வாங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பெனி துணை ராணுவப் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் வீரர்கள் தமிழகம் வர உள்ளனர். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததும், உடனடியாக மாவட்டம், கட்சி மற்றும் வேட்பாளர் தகவல்கள் சுருக்கமாக இணையதளத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், ஆவணங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications