மீனவர் பேச்சுவார்த்தையை கொழும்பில் மே 12, 13-ல் நடத்தலாம்: தமிழக அரசு
சென்னை: தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையை கொழும்பில் அடுத்த மாதம் மே 12, 13-ந் தேதிகளில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு மீன்வளத்துறைச் செயலாளர் எஸ்.விஜயகுமார், மத்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை முன்மொழிந்து 20.9.13 அன்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து 27.1.14 அன்று சென்னையில் இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து உங்களுக்கு நான் 2.3.14 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பில் 13.3.14 அன்று நடத்தலாம் என்று கூறியிருந்தேன். ஆனால், கைது செய்யப்பட்டு இலங்கையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதைத் தொடர்ந்தே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதில் தெளிவாகக் கூறியிருந்தேன்.
மேலும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவது பற்றிய தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்பது குறித்து 11.3.14 அன்று குறிப்பிட்டு இருந்தேன். பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு முன்பாக எங்கள் மீனவர்கள் அங்கிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்.
முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிகளின் காரணமாக 98 தமிழக மீனவர்களையும், 23 மீன்பிடி படகுகளையும் இலங்கை அதிகாரிகள் விடுவித்தனர். அவர்கள் தமிழகத்துக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் உங்கள் துணைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் மீனவர்களுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சு வார்த்தையை கொழும்பில் மே 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டத்தை மே 12, 13-ந் தேதிகளில் நடத்தலாம் என்பதை இலங்கை அரசுக்கு தகவலாகத் தெரிவியுங்கள். 27.1.14 அன்று நடந்த மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதே தமிழக, புதுச்சேரி மீனவர்கள்தான், அடுத்தகட்ட பேச்சு வார்த்தையிலும் கலந்துகொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் வைக்கப்படும் நிகழ்ச்சி நிரல், 2.3.14 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வரும் மீனவர்களுடன், அந்தக் கூட்டத்தை பார்வையிடுவதற்காக மீன்வளத்துறை செயலாளர், இயக்குனர், கூடுதல் இயக்குனர் ஆகியோரும் வருவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.