தமிழகத்தில் அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கிவிட்டது: தமிழிசை குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்றும் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மீதான வழக்கில் வந்துள்ள தீர்ப்பையடுத்து, தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் அனைவரும் மக்களின் தேவைகளை கவனிப்பதை விட்டு விட்டு உண்ணாவிரதம், தீச்சட்டி எடுப்பது, யாகம் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், போராட்டம் நடத்தும் அதிமுகவினர் இதுமட்டுமன்றி கடைகளை அடைக்க வேண்டும் என்று வியாபாரிகளை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஒவ்வொரு நாளும் ஒரு அமைப்பினர் மற்றும் சங்கத்தினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஏன் என்று புரியவில்லை.
தமிழகத்தில் நேற்று தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்னி பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். பண்டிகை நேரத்தில் இப்படிச் செய்வதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
ஜெயலலிதாவுக்காக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் வருத்தமளிக்கச் செய்கிறது.
தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. ஒரு அரசியல் தலைவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தொடரக்கூடாது.
இது ஆபத்தான விஷயமாகும். அரசியல் தலைவர்களுக்காக பொது மக்களை துன்புறுத்தக் கூடாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.