"சசிகலா"வை மாற்றிய அதிமுக அரசு.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கியதற்கு "பரிசு"!
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்த நிலபதிவாளர் சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்த நில பதிவாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கிரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி, தந்தை, சகோதரர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.
100 ஏக்கர் நிலம்
புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள குவாரியும் முடக்கப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை பதிவாளர் சசிகலா
இந்த உத்தரவை புதுக்கோட்டை மாவட்ட நிலபதிவாளர் சசிகலா நிறைவேற்றியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவரை அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
விருதுநகருக்கு இடமாற்றம்
புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளராக இருந்த சசிகலாவை தமிழக அரசு அதிரடியாக, விருதுநகர் மாவட்ட நிலப் பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தண்டனையா
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்தை முடக்கியதற்காக இந்த தண்டனையா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கடுமையான புகார்கள் இருந்தும் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் முதல்வர் உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.