பா.ஜ.கவினர் யாரும் பாதிப்பட்டுவிடக் கூடாது!' - ஆளுநர் முடிவால் அச்சத்தில் 1,865 கைதிகள்
கைதிகளை முன்விடுதலை செய்வதால் பாஜகவினர் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று அந்த முடிவை ஆளுநர் தள்ளி வைத்துள்ளார்.
சென்னை: முன்விடுதலை தொடர்பாக அரசு எந்த முடிவையும் அறிவிக்காதது கைதிகளின் குடும்பங்களில் வேதனையை அளித்துள்ளது. ' பா.ஜ.கவினர் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது எனக் கூறி, முன்விடுதலையை ஒத்தி வைத்திருக்கிறார் ஆளுநர்' என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில்.
'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, பத்தாண்டுகள் சிறைத் தண்டணையை நிறைவு செய்த கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்' என சட்டசபையில் அறிவித்தார் முதல்வர். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
மாவட்ட மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்களே, கைதிகள் குறித்த விவரத்தையும் அவர்களது நன்னடத்தையைக் குறித்தும் விசாரணை நடத்தி, அரசுக்கு இறுதி அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்விடுதலை
மதரீதியான கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் ஆகியோரை முன்விடுதலையில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அரசின் உத்தரவையடுத்து, ஒவ்வொரு சிறையிலும் பத்தாண்டுகளை நிறைவு செய்த கைதிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,865 கைதிகள் முன்விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
பரிசீலிக்கவில்லை
ஆனால், இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், " எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவடைந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. இன்னமும் கைதிகளின் விடுதலை குறித்து ஆளுநர் பரிசீலிக்கவில்லை.
ஒப்புதல் இல்லை
சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி என அனைத்துப் படிநிலை விசாரணைகளையும் கடந்து அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. தமிழக அரசும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துவிட்டது. இந்தப் ஃபைலுக்கு ஆளுநர் பன்வாரிலால் இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை" என்றார்.
அழைத்து பேச்சு
" கடந்த ஏப்ரல் 1-ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்த விவகாரம் குறித்து சில தகவல்களைப் பெறுவதற்காக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோரை அழைத்துப் பேசினார் ஆளுநர்.
குற்றவாளிகள்
பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஒருகட்டத்தில், குற்றவாளிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாகப் படித்துப் பார்த்த பிறகு கையெழுத்துப் போடுகிறேன் என உறுதியாகக் கூறிவிட்டார்.
உறுதி
ஆனால், எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதைப் பற்றிக் கேட்டபோது, ' கோவை, சேலம் உள்ளிட்ட சிறைகளில் கோவை கலவரத்தைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமான பா.ஜ.கவினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் சிறையில் உள்ளனர். இந்த அரசாணையால் அவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஆளுநர்.
திணறுகிறது
அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அப்படிச் செய்தால், இதே சம்பவங்களுக்காக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களும் சலுகை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதற்கேற்ப அரசாணைத் திருத்த வேண்டியது வரும் என்பதால்தான் ஆளுநர் அலுவலகம் அமைதியாக இருக்கிறது. அரசும் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது" என்றார்.