சொந்தப் பிரச்சனைக்காகதான் தற்கொலையே பண்ணிகிட்டாங்க.. முழு பூசணிக்காயை மறைத்த தமிழக அரசு
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்ளவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூறியிருப்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.
-பா. கிருஷ்ணன்
சென்னை: முழுப் பூசணிக்காயை சாப்பாட்டுக்குள் மறைத்து வைப்பது எப்படி என்றும் மணலைக் கயிறாய்த் திரிப்பது எப்படி என்றும் அறிந்துகொள்ள யாராவது விரும்பினால்,தமிழக அரசை அணுகலாம்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குரைஞர் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில் "தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. நோய், வயது முதிர்வு, குடும்பப் பிரச்சினை ஆகியவை காரணமாக இறந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு விவசாயிகள் வாழ்ந்த காலத்தில்தான் அவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் செயல்படவில்லை. இறந்த பிறகு கூடவா அவர்களது கவுரவத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படுவது.. இதைப் போன்ற வேதனைக்குரிய நிகழ்வு உலகில் எங்கேயும் நடக்காது.
சோறுபோடும் விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணத்தைத் தர இயலவில்லை.
அவர்களுக்குத் தண்ணீரைப் பெற்றுத் தர இயலவில்லை.
அவர்களது கடன் சுமையைத் தள்ளுபடி செய்து வாழவும் வகை செய்யவில்லை.
விவசாயத்தையே சாகடிக்கப் போகிறது எரிவாயுத் திட்டங்களை எதிர்த்துக் குரல் எழுப்புவதில்லை.
போராடும் விவசாயிகளை ஏறெடுத்துப் பார்க்கவும் தாமதமாகத்தான் நேரம் கிடைக்கிறது.
இவற்றையெல்லாம் கூட ஏதாவது காரணங்களால் பொறுத்துக் கொள்ள இயலும்.
ஆனால், இறந்துபோன விவசாயிகளின் மரணத்தையும் கொச்சைப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்...
தற்கொலை என்பது இயல்பான மரணமில்லை. அது விஷம் குடித்தோ, தூக்கு மாட்டியோ, கிணற்றில், ஆற்றில் குதித்தோ, ரயில் தண்டவாளத்தின் மீது படுத்து ரயில் ஏறியோ, துப்பாக்கியால் தன் நெற்றிப் பொட்டில்வைத்து சுட்டுக் கொண்டோதான் இறப்பது என்று இல்லை.
இயற்கைக்கு மாறாக, அதிர்ச்சியினால் இறப்பது கூட தற்கொலைக்கு ஈடான மரணம்தான்.
அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 82 விவசாயிகள் வயது முதிர்ந்த காரணத்தாலும், நோயின் காரணத்தாலும் இறந்தனர் என்று கூறியுள்ளது. மீதி 30 பேர் குடும்பப் பிரச்சினையால் இறந்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.
சாதாரண மனிதர்கள், ஏன் விவசாயியாக இருந்தாலும் வயது முதிர்ந்தவர்கள் இறந்துவிட்டாலோ, நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டாலோ, அதை எந்த ஊடகமும் செய்தியாக வெளியிடாது. ஆனால், அவை .யாவும் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன.
உதாரணத்திற்கு, காட்டுமன்னார் கோவில் அருகே கடந்த ஜனவரி மாதம் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகி இறந்ததைக் கண்டு செந்தமிழன் என்ற விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். அவர் நான்கே ஏக்கரில் நெல் விதைத்திருந்தார். தண்ணீருக்காக ஒரு லட்ச ரூபாய் செலவிட்டு ஆழ்துளைக் குழாய் அமைத்தார். ஆனாலும் நிலத்தடி நீர் போதிய அளவு இல்லாததால், பயிர்கள் கருகின. அதைப் பார்த்த அவர் மயங்கி விழுந்தார், மருத்துவனை சிகிச்சை பெறு முன் அவர் இறந்தார்.
நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவிட்டதால், அதைத் தடுக்கவும், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் அரசு தவறிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்டது நீர் வளம். அதன் விளைவாக பயிர் கருகி, விவசாயியின் மரணத்துக்கு வழி வகுத்துவிட்டது.
இது தற்கொலை இல்லை என்று தனது பொறுப்பை அரசு எளிதில் கைவிட முடியாது.
இன்னொரு சம்பவத்தில் கொடுத்த கடனுக்காக விவசாயியை கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர். அந்த வங்கி அதிகாரி தினமும் கை வைக்கும் சோற்றுக்குக் காரணமே விவசாயிகள்தான் என்பதை ஒரு கணமும் நினைக்கவில்லை போலும்.
வங்கி அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாகியதால் இன்னொரு விவசாயி உயிரிழந்தார். அதைத் தற்கொலை என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது.
இதுபோன்ற சம்பவங்களைத் தற்கொலை என்று சொல்லாமல், அரசு, ஆட்சியாளர்கள், வங்கிகள், நிர்வாகம் செய்த கொலை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நாடு முழுவதும்2015ம் ஆண்டு மட்டும் 12,602 விவசாயிகள் தற்கொலை செ்யதுகொண்டனர் என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆவணம் (என்சிஆர்பி).
கடந்த 1995-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2014ல் 895, 2015ல் 606 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், இப்போது ஒரே நாளில் மட்டும் 6 விவசாயிகள் மரணம்; கடந்த சில நாட்களில் 30 விவசாயிகள் தற்கொலை போன்ற சம்பவங்களால், இந்த ஆண்டின் தொடக்கத்தில்லேயே நிகழ்வது அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1876-78-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியான சென்னை மாகாணத்தில் கடும் பஞ்சம் பீடித்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும், நோயாலும் மரணமடைந்தனர். இதுபோன்ற நிலைமை நமக்கு வராமல் கூட இருக்கலாம். ஆனால், நமது எதிர்கால சந்ததியினருக்கு வர வாய்ப்புள்ளது. தற்போது ஆறு, ஏரி, கிணறுகளில் நிலத்தடி நீர் 60 முதல் 65 சதவிகிதம் வரை வறண்டு விட்டது. இந்நிலை நீடித்தால் 2030-ம் ஆண்டு இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கான போர்க்கால நடவடிக்கையை நாடு முழுவதும் எடுத்தாக வேண்டும். மாறாக, விளக்கங்களைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது.
முழுப் பூசணியை சாப்பாட்டுக்குள் மறைத்து வைக்க அரசு முயல்கிறது. இனிமேல், எந்தப் பூசணியையும் மறைப்பதற்குப் போதிய சாப்பாடு கூட இருக்காது இப்படி விவசாயிகளின் துயரம் அதிகரித்தால்...












Click it and Unblock the Notifications