ஏரி மராமத்து பணியிலும் ஊழல்... மணல் கொள்ளை... தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
ஏரிகளை தூர்வாரும் திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு அதில் சவுடு மண் கொள்ளை நடப்பதற்கு தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் வழி வகை செய்கின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணியின்போது சவுடு மண் கொள்ளையடிக்கப்படுவதாக பாமக ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்த அதிமுக அரசு, ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தது. மேலும் மணிமங்கலம் ஏரியில் அப்பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பொதுமக்களை கவர்வதற்காக இதுபோன்ற திட்டங்களை அறிவித்துவிட்டு அதில் ஊழலையும், முறைகேடுகளையும் செயல்படுத்துவதில் தமிழக அரசு வல்லமை படைத்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

தண்ணீர் பஞ்சம்
இதுகுறித்து அவர் அறிக்கையில் குறிப்பிடுகையில், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் அடிப்படை ஆதாரமான இருக்கும் நீர் நிர் நிலைகளை பராமரிப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் கடந்த ஆண்டு வெள்ளமாக ஓடிய தண்ணீரை வீணடித்து விட்டு தற்போது தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது.

பட்ஜெட்டில் அறிவிப்பு
நடப்பு நிதியாண்டில் 1519 நீர் நிலைகளை தூர்வாருவதற்காக ரூ.100 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அதன்படி மணிமங்கலம் ஏரியில் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஆனால் இந்த நீர்நிலையில் தூர்வாரும் பணிக்கு பதிலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

சவுடு மண் எதற்காக
குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் போது தூர்வாரப்படும் மண்ணை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எடுத்துச் செல்லவர். அந்த மண் வளமானது என்பதால் அதை நிலத்தில் போடும் போது, வயல்களின் வளம் அதிகரிக்கும். ஆனால் தற்போது சவுடு மண் உழவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, செங்கல் ஆலை அதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லோடு ரூ.1500
செங்கல் சூளை உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமான இயந்திரங்களைக் கொண்டு வந்து 15 அடி முதல் 20 அடி ஆழத்திற்கு சவுடு மண்ணை வெட்டி எடுத்து சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்கின்றனர். இதையே தூர்வாரியதாக கணக்கு காட்டி அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு கொள்ளையடிக்கிறது.

நல்ல திட்டம்
உண்மையிலேயே குடிமராமத்து பணி என்பது நல்ல திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டால் வருங்காலங்களில் மழை நீர் சேகரிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருக்காது. ஆனால் தமிழக அரசோ எந்த திட்டத்தை செய்தாலும் அதில் ஊழல் செய்கிறது. எனவே திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications