தமிழக அரசின் கடன் ரூ2,47,031 கோடி: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 47ஆயிரம் கோடியாக இருக்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். வரும் நிதியாண்டில் தமிழக அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.9154 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
2011-12-ம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு நிதிப்பற்றாக்குறை இருந்தபோது, அதனைச்சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்ட அப்போதைய எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா, இது தான் கருணாநிதியின் 5 ஆண்டுகாலச் சாதனை என்று அறிக்கை விடுத்தார். தற்போது 5 ஆண்டு காலத்தில் நிதி பற்றாக்குறை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப் பேற்றது. தற்போது 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இன்னும் இரு மாதங்களில் சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தேர்தல் வரையிலான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
2016-17-ம் நிதியாண்டில், அரசின் வருவாய் ரூ.1.52 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டில், அரசின் செலவு 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடி என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-16ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் ரூ.86,537.70 கோடியாக உள்ள மாநில சொந்த வரி வருவாய், 2016-17ம் நிதியாண்டில் ரூ.96,531.41 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015-16ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்டதைவிட, வணிகவரி வருவாய் 11.69 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2016-17ம் நிதியாண்டில் ரூ.72,326.45 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
மதுவிற்பனை மூலம் ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு: மாநில ஆயத்தீர்வை(டாஸ்மாக்) மூலம் கிடைக்கும் வருவாய், வரும் நிதியாண்டில் ரூ.7,101.81 கோடி எட்டும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2016-17ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், முத்திரை தாள்கள் மற்றும் பதிவு கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருவாய் ரூ.10,548.25 கோடி எனவும், வாகனங்கள் மீதான வரிகள் ரூ.4,925.05 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் ரூ.9,288.63 கோடி எனவும், மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு ரூ.23,688.11 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பல மத்திய அரசு திட்டங்களின் நிதி பங்கீட்டு முறை 2015-2016ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், 2016-2017ம் ஆண்டில் நமது மாநில அரசிற்கு ரூ.1,400 கோடியில் இருந்து ரூ.2,000 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த மாற்றங்களை கணக்கில் கொண்டு, 2016-2017ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானிய உதவி ரூ.22,496.08 கோடி அளவில் மட்டுமே இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2015-16 திருத்த மதிப்பீடுகளில் நிதி பற்றாக்குறை ரூ.32,359.59 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.94 சதவீதமாகும். 2016-17ம் ஆண்டில் இப்பற்றாக்குறை ரூ. 36,740.11 கோடியாக இருக்கும்.
இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பதினான்காவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டே இருக்கும். வரும் நிதியாண்டில் ரூ.37,782 கோடி வரை கடன் வாங்க மாநிலத்திற்கு தகுதியுள்ள போதிலும், 2016-2017ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் கடன் அளவு ரூ.35,129 கோடி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட நிலுவையில் உள்ள கடன் வருகிற நிதியாண்டில் ரூ.2,47,031 கோடியாக இருக்கும். இவ்வாறு இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* மொத்த நிதி (உத்தேசம் ) ஒதுக்கீடு : 60 , 610 கோடி
* திட்ட வடிவமைப்பு நிதியத்திற்கு ரூ. 200 கோடி
* திறன் பயிற்சி மூலம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 881 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை.
* நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ. 280 கோடி
* காவல்துறைக்கு ரூ. 6 ஆயிரத்து 99 கோடி
* தீயணைப்பு துறைக்கு ரூ . 227 கோடி
* சிறைத்துறைக்கு ரூ. 281 கோடி
* மின்சார துறைக்கு 13 ஆயிரத்து 819. 03 கோடி .
* போக்குவரத்து துறை : ரூ . 1, 590 கோடி
* மெட்ரோ ரயில் திட்டம் : ரூ . 1, 032 கோடி.
* நெடுஞ்சாலை துறை ; 8 ஆயிரத்து 486. 26 கோடி
* ஊரகம் துறைக்கு : ரூ . 18, 503 கோடி
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ. 2 ஆயிரத்து 702
* பழங்குடி இன மக்கள் மேம்பாடு : ரூ . 261 கோடி
* வேளாண் துறை : ரூ . 6 938 . 57 கோடி
* சுகாதாரம் மேம்பாடு : 9, 930 கோடி
* மீன் பிடி துறை : ரூ. 743 கோடி
* கால்நடை துறையினர் 1, 188.. 88
* வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை 677 கோடி
* நகர்ப்புற வாழ்வாதாரம்: ரூ. 280 கோடி
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு 32. 74 கோடி
* நீதி துறைக்கு ரூ. 980 கோடி
* மாற்று திறனாளிகள் மேம்பாடு : ரூ. 391 கோடி
* குடி நீர் வழங்கல் : 1, 802 கோடி
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு(1947) தமிழகத்தை பல அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, அதாவது 64 ஆண்டு ஆட்சி காலக்கட்டத்தில் நிலுவையில் உள்ள கடன் ரூ.1,01,541 கோடியாகும்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசு கடன் தொகையை ரூ.2,47,031 கோடியாக உயர்த்தி உள்ளது. தமிழக அரசு உயர்த்தியுள்ள ரூ.2,47,031 கோடி கடன் தொகையை கணக்கிட்டால், 7 கோடியே 50 லட்சம் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.32,937 கடனை ஏற்றி வைத்துள்ளது.
தமிழக அரசு நிர்வாகத்தை நடத்த பெற்ற கடன் மற்றும் தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்காக வாங்கிய கடனை சேர்த்தால், மொத்த கடன் தொகை ரூ. 4 லட்சம் கோடியை தாண்டும் என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.