மக்கள் முதல்வர் வழிகாட்ட தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ள ஆய்வுக்கூட்டம்
சென்னை: வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நடுநாயகமாக மக்கள் முதல்வரின் படம் இந்த ஆய்வுக்கூட்டத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த ஆய்வுக்கூட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று (13.11.2014) சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவற்றை சீர் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மழைநீர் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்காத வகையில் மழை நீர் வடிகால்களை தூர் வாருதல் பணிகள் குறித்தும், பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும், தொற்று நோய் பரவாமல் தடுக்க அமைக்கப்பட்ட மருத்துவ முகாம்களின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து மண்டலங்களிலும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக எடுக்கப்படும் பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளித்தல் குறித்தும், கொசு தடுப்பு நடவடிக்கையாக கொசு புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் குறித்தும், மாநகராட்சியால் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், தாய் சேய் நல இல்லங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, துணை மேயர் திரு பெஞ்சமின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர்,இ.ஆ.ப., இணை ஆணையர் திரு விஜய் பிங்ளே,இ.ஆ.ப.,துணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.