என்னது 33 மாவட்டங்களா? கல்வித்துறையின் அலட்சிய லிஸ்ட்..இப்படித் தான் பேப்பரும் திருத்திருப்பாங்களோ?
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட +2 பொதுத் தேர்வு முடிவுகள் ரேங்க் முறையின்றி வெளியிடப்பட்டது அனைவராலும் உற்று நோக்கப்பட்ட நிலையில் மாவட்ட பட்டியல் தயாரிப்பதில் பள்ளிகல்வி அதிகாரிகள் அலட்சியம்.
சென்னை : தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் மாவட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் என அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் டிபிஐ வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த பள்ளிகல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முடிவுகள் ரேங்க் முறையில் கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால், மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதப் பட்டியலை அரசு வெளியிட்டிருந்தது.
தேர்வு முடிவுகள் வெளியான பரபரப்பில் இருந்தவர்களுக்கு தொடக்கம் முதலே சந்தேகத்தை ஏற்படுத்தியது தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் என்பதாகவே இருந்தது. ஏனெனில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பள்ளிக் கல்வித் துறை அளித்த பட்டியலில் 33 மாவட்டங்கள் என்று இருந்தது.
விவாதத்திற்கு வித்திட்ட லிஸ்ட்
இதனால் பரபரப்பு சேனல்கள் கல்வி வாரியாக தமிழகத்தில் 33 மாவட்டங்கள் என்று தெரிவித்தன. ஆனால் செய்தி பரபரப்பு முடிந்த பின்னர் இந்த லிஸ்ட் சமூக ஊடகங்களில் வெளியான போது தான் அதிகாரிகளின் அலட்சியம் வெளி வந்தது. அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் இருந்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
25க்கு அப்புறம் 27ஆ?
அதன் பின்னர் மாவட்ட லிஸ்ட்டை பார்த்தால் தான் தெரிகிறது எண் வரிசையில் 25க்குப் பின் 26ஐ காணவில்லை. 25ம் எண்ணிற்கு பிறகு 27 என்று அச்சிடப்பட்டள்ளதால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையில் 33 என வந்துள்ளது.
அதிகாரிகளின் அலட்சியம்
ரேங்க் முறையில்லாமல் வெளியாகும் முதல் தேர்வு முடிவுகள் என்பதால் அதிகாரிகள் எவ்வளவு ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் முதலிலேயே கோட்டை விட்டு மாவட்டங்களின் எண்ணிக்கையில் சொதப்பியது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.
இப்படித்தான் கூட்டியிருப்பாங்களா?
தேர்வு முடிவுகளுக்கான செய்தி அறிக்கை வெளியிடுவதிலேயே இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளது அரசுத் தேர்வுகள் துறை. அப்படியானால் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாளையும் இப்படித் தான் திருத்தி மதிப்பெண் எண்ணிக்கை கூட்டுவதிலும் அலட்சியத்தை காட்டியிருக்குமோ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது அதிகாரிகளின் இந்த அலட்சிய லிஸ்ட்.