இடமாறுதல் உத்தரவில் திடீர் நிபந்தனை... ஆசிரியர்கள் போராட்டம்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 8 வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு மட்டுமே இடம் மாறுதல் வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
இடைநிலை ஆசிரியர்கள் இடம் மாறுதல் தொடர்பான உத்தரவு ஒன்று நேற்று பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெறும் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலிப் பணி இடங்கள் அதிகம் இருப்பதால் மாணவர்கள், பள்ளிகளின் நலன் கருதி பிற மாவட்ட ஆசிரியர்களுக்கு இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டுமே இடம் மாற்றம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த உத்தரவு ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று கவுன்சிலிங் நடைபெற்ற மையங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆசிரியர்களும் தங்களுக்கும் இடம் மாறுதல் தேவை என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.