அப்போ, அர்ச்சனா ராமசுந்தரம், இப்போ அருணாச்சலம்.. மீண்டும் சிபிஐயுடன் தமிழக அரசு மோதல்
சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை மத்திய அரசு சிபிஐக்கு பணியிடமாற்றம் செய்த நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருணாச்சலத்தை சிபிஐ மாநில அரசு பணிக்கு திருப்பியனுப்ப தயங்கிவருகிறது. இந்த விவகாரத்திலும், மத்திய மாநில அரசுக நிர்வாகங்களிடையே மோதல் தொடர்கிறது.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேங்க்கிலுள்ள தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அருணாச்சலத்தை சிபிஐ டெபுடேசனுக்காக அழைத்திருந்தது. காலக்கெடு முடிந்த பிறகு தமிழக அரசிடம், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க சிபிஐ அனுமதி கேட்டது. ஆனால், தமிழக அரசோ, மறுத்தது. இருப்பினும் சிபிஐ ஜூன் 30ம் தேதிவரை டெபுடேசனை மூன்றாவது முறையாக நீட்டித்துக்கொண்டது.
சிபிஐயின், சென்னை இணை இயக்குநர் என்ற பதவியிலுள்ள அருணாச்சலத்துக்கு ஹைதராபாத் இணை இயக்குநர் பதவியும் கூடுதலாக தரப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான பல முக்கிய விசாரணைகளை அருணாச்சலம் மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், அவரை மத்திய மாநில அரசுகள் இப்படி இழுபறி நிலையில் வைத்திருப்பது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
பின்புலம்: கடந்த 1980ம் ஆண்டில், தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக போலீசில் பல பதவிகளை வகித்தவர். கடைசியாக, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை இயக்குனராக இருந்த போது, 2014 பிப்ரவரியில், சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அறிவிக்கப்பட்டார். 'மத்திய அரசு பணிக்கு செல்லும் முன், தமிழக அரசிடம் அனுமதி கேட்கவில்லை' என்று கூறி ஜெயலலிதா அரசு அவரை, பணியிடை நீக்கம் செய்தது.
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பியாக ராமானுஜம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு நோ சொன்னதால், ஜெயலலிதா அரசு கோபம் கொண்டது. இதனாலேயே அர்ச்சனாவை பணியில் இருந்து விடுவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அர்ச்சனாவை சிபிஐ பதவியில் உட்காரவிட மாட்டோம்' என்று பாஜக அறிவித்திருந்தது. பதவிக்காக அர்ச்சனா ராமசுந்தரம் பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் பாஜக சொன்னது போலவே அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து தேசிய குற்ற ஆவண காப்பக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.