என்ஜீனியரிங் கவுன்சிலிங் 'திருவிழா'… சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அதாவது கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதையடுத்து பொது கவுன்சிலிங் தொடங்கவுள்ளது. இதையடுத்து சென்னையின் பல்வேறு நகரங்களிலிருந்தும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொறியியல் கவுன்சிலிங் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல நடந்து வருகிறது. 600க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பிஇ படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இதை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்த வருடம் கலந்தாய்வை நடத்துவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரித்து அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 16-ந்தேதி வெளியிட்டது.
விளையாட்டுப் பிரிவு
விளையாட்டுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் 23ம் தேதி தொடங்கி இன்று வரை நடந்தது.
நாளை மாற்றுத் திறனாளிகளுக்கு
நாளை 25-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்காக கலந்தாய்வு நடக்கிறது.
27ம் தேதி முதல் பொது கவுன்சிலிங்
அதன் பின்னர் 27ம் தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது.
ஜூலை 7ம் தேதி வொகேஷனல் மாணவர்களுக்கு
ஜூலை 7ம் தேதி வொகேஷனல் எனப்படும் தொழிற் கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கி, ஜூலை 20ம் தேதி வரை நடைபெறும்.
அண்ணா பல்கலை
கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலை வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் இருந்து
கோயம்பேட்டில் இருந்து திருவான்மியூருக்கு டி70 என்ற சிறப்பு பேருந்து காலை 5 மணி முதல் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பெருங்களத்தூரில்
அதே போல மற்றொரு சிறப்பு பேருந்து பெருங்களத்தூரில் இருந்து 21ஜி வழித் தடத்தில் 10 நிமிட இடைவெளியில் காலை 5 மணி முதல் பிராட்வேக்கு இயக்கப்படும்.
300 மாநகர சிறப்புப் பேருந்துகள்
இது மட்டும் அல்லாமல் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மாநகர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.