சென்னை: முன்விரோதம்… நடுரோட்டில் மகன் வெட்டிக்கொலை, தந்தை உயிருக்கு போராட்டம்
சென்னை: இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டில் வெட்டி சாய்த்த சம்பவம் சென்னை கோட்டூர்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த மகன் உயிரிழந்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலையான நபரின் பெயர் தியாகராஜன்(35) என்பதாகும். தரமணி மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்த இவர், கோட்டூர்புரம் பீலிஅம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை கோவிந்தசாமி (63). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தியாகராஜனின் மனைவி பெயர் ரேவதி (30). கபிலேஷ் என்ற 4 வயது மகன் இருக்கிறான்.
இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பீலிஅம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது. அந்த கிணறை இடித்து விட்டு, அதன் பின்புறம் அதே பகுதியில் வசிக்கும் காண்டிராக்டர் ரவி என்பவர் விற்பனைக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி உள்ளார். அந்த பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.பொதுமக்களுக்கு ஆதரவாக கோவிந்தசாமியும், தியாகராஜனும் செயல்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் ரவிக்கும், தியாகராஜன், அவரது தந்தை கோவிந்தசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பீலிஅம்மன் கோவில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது. எனவே இந்து சமயஅறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட கோவில் கிணறு மீண்டும் தோண்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கிணறு ரவி கட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இடையூறாக உள்ளது. இது தொடர்பான சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ரவி கட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக அதே பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரான்ஸ்பார்மரை திறக்கக்கூடாது என பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று பகலில் கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தியாகராஜனும், அவரது தந்தை கோவிந்தசாமியும் கலந்து கொண்டனர். விசாரணை முடிந்து தியாகராஜன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பைக்கின் பின் சீட்டில் கோவிந்தசாமி உட்கார்ந்து இருந்தார். அவர்கள் கோட்டூர்புரம் ஏரிக்கரை ரோட்டில் வந்து கொண்டிருந்த போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து வழிமறித்தனர். அந்த 3 பேரும் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்திருந்தனர்.
உடனே தியாகராஜன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் ஹெல்மெட் அணிந்திருந்த 3 மர்ம நபர்களும் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி கைகளில் அரிவாள்களுடன் பாய்ந்து வந்தனர். தியாகராஜனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். அவரை காப்பாற்ற கோவிந்தசாமி குறுக்கே வந்தார். அவருக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. தியாகராஜனும், கோவிந்தசாமியும் ரத்த வெள்ளத்துடன் நடுரோட்டில் உயிருக்கு போரடினர். ஹெல்மெட் ஆசாமிகள் உடனடியாக தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய தியாகராஜனையும், அவரது தந்தை கோவிந்தசாமியையும் ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தியாகராஜன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கோவிந்தசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
தியாகராஜன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கு வந்த அவரது மனைவி ரேவதி கதறி துடித்தார் அந்த பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோட்டூர்புரத்தில் பட்டப்பகலில் நடு ரோட்டில் நடந்த தியாகராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது.
கோட்டூர்புரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் காண்டிராக்டர் ரவி உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.