அப்பாவி குழந்தைகளை கொன்ற தீவிரவாதிகள் மனிதராக இருக்க தகுதியற்றவர்கள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை:பெஷாவர் தாக்குதலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், அத்தாக்குதலில் இதுவரை பள்ளிக்குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. மேலும் அங்கு குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள் என்பதிலும், தங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளிடம் கூட நேசம் பாராட்டாத அயோக்கியத்தனமும், இரக்கமற்ற அரக்க மனமும் படைத்தவர்கள் என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது.
எதிரியின் குழந்தையாக இருந்தாலும், அம்முகம் காணும் போது, ஏற்பட வேண்டிய பாச உணர்வு அற்றுப்போனவர்களாகவே குழந்தைகளை கொன்ற கொடியவர்கள் இருக்க வேண்டும். ஏனெனில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்களைக் காணும் போது நாகரீகமும், அறிவு முதிர்ச்சியுமற்ற காட்டுமிரண்டிகளாக, மனிதமிருகங்களாக மாறிவிட்டார்களோ என்று மனம் பதைபதைக்கிறது.
உலகின் எந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும், மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும், மட்டுமல்ல, சம்பவத்தில் ஈடுபட்டவர்களைச் கண்டறிந்து தாமதமின்றி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மதங்களை நுழைத்து யாரும் குளிர்காய கூடாது.
ஆகவே பாகிஸ்தான் அரசு பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, இதுவே கடைசியான நிகழ்ச்சியாக இருக்க வேண்டிய அளவுக்கு கடும் நடடிவக்கைகள் எடுக்க வேண்டும். தயவு தாட்சிசண்யம், இரக்கம் போன்ற எந்தச் சலுகையும் அக்கயவர்களுக்கு தரப்படக் கூடாது என்று தமுமுக வலியுறுத்துகிறது.
இறந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் வேதனையில் தமுமுகவும் தன்னை இணைத்துக் கொள்கிறது அவர்களுக்கு பொறுமையைத் தர இறைவனை வேண்டுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.