டிடிவி தினகரன் அணியில் மேலும் ஒரு எம்எல்ஏ.. ஆதரவு எண்ணிக்கை 35 ஆக உயர்வு
டிடிவி தினகரனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு ஏற்கனவே 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., தென்னரசும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் இருந்த டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக தெரிவித்தார். இதனிடையே பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின்படி அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் விலகி இருக்கிறேன். ஆகஸ்ட்4-ம் தேதிக்கு பிறகு எனது கட்சி பணிகளை தீவிரப்படுத்துவேன். அவர்களால் இரு அணிகளையும் இணைக்க முடியவில்லை. நானும் சசிகலாவும் நினைத்தால் இரு அணிகளையும் நிச்சயம் இணைத்து விடுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறி வருகிறார்.
தினகரனுக்கு ஆதரவாக 34 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இன்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., தென்னரசு தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு 35 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ., டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.