சில்லறை வர்த்தகத்தை ஒழிப்பதுதான் மோடியின் திட்டம்.. வெள்ளையன் காட்டம்
சில்லறை வர்த்தகத்தை ஒழிப்பதற்காகவே பிரதமர் மோடி ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை : சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், சில்லறை வர்த்தகத்தை ஒழிக்கவே 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்நாடு சில்லறை வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுகுறு வணிகர்கள் கலந்து கொண்டனர்.
மோடி அரசுக்கு எதிராக முழக்கம்...
போராட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.மத்தியஅரசை கண்டித்த பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
கிலோ ரூ.20...
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை விளக்கும் வகையில் ஒரு கிலோ 5000 ரூபாய் 20 ரூபாய் என்றும், ஒரு கிலோ 1000 ரூபாய் நோட்டு 22 ரூபாய் என்றும் தராசிர் வைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சீரழிந்த சில்லறை வணிகம்
ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பால் சில்லறை வர்த்தகம் சீரழிந்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
சில்லறை தட்டுப்பாட்டில் மக்கள்...
போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய த.வெள்ளையன் சில்லறை தட்டுப்பாட்டால் நாட்டில் 130 மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
அழிவுப்பாதையை நோக்கி பொருளாதாரம்...
அழிவுப்பாதையை நோக்கி நாட்டின் பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதாக கூறிய வெள்ளையன் கருப்புப்பணம் வைத்திருக்கும் பண முதலைகளை கண்டுபிடிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக தெரிவித்தார்.
வளர்ச்சி கண்ட ஆன்லைன் வர்த்தகம்...
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சில்லறை தட்டுப்பாட்டால் ஆன்லைன் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் வெள்ளையன் கூறினார்.
ஜனவரியில் நாடு தழுவிய போராட்டம்...
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் உள்நாட்டு வணிகத்தை ஒழிக்கவும் பிரதமர் மோடி முயற்சிப்பதாக கூறிய வெள்ளையன், இத்திட்டத்தைக் கண்டித்து வரும் ஜனவரியில் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.