சசிகலாவை விடமாட்டேன்.. ஜெயலலிதாவை எதிர்த்த டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்ணாவிரதம்
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவை எதிர்த்து டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்.
சென்னை: தொடர்ந்து ஜெயலலிதாவின் அனைத்து செயல்களையும் எதிர்த்து போராடி வந்த டிராபிக் ராமசாமி, தற்போது அவரது தோழி சசிகலாவிற்கு எதிராக தனது போராட்டத்தைத் தொடங்கி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர். கே. நகரில் போட்டியிட்டவர். அவருக்கு வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். இப்படி நிறைய விஷயங்களில் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்ததோடு, பொது நல வழக்குகளையும் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருபவர்.
அண்மையில் அவருக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்த நிலையிலேயே சசிகலாவிற்கு எதிராக ஒரு வழக்கையும் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிவிட்ட அவர், சசிகலாவிற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சர்கள் முதல் துணைவேந்தர்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைவரும் போயஸ்கார்டனுக்கு சென்று ஜெயலலிதா வீட்டில் வசிக்கும் சசிகலாவை பார்த்துவிட்டு செல்கிறார்கள். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால் அதுபற்றி நான் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளேன். இதனிடையே தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றுள்ளது. இதே போன்று ஜெயலலிதா வீட்டிலும் சோதனை நடத்தி சீல் வைத்து சசிகலாவை வெளியே துரத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை முன் வைத்துத்தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்கி இருக்கிறேன். சசிகலாவை கைது செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.