நாகர்கோவில்-பெங்களூர் ரயில் நிறுத்தம்: திருச்சி, நெல்லை இன்டர்சிட்டியை நீ்டிக்க கோரிக்கை
கன்னியாகுமரி: நாகர்கோவில்-பெங்களூர் வாராந்திர ரயில் நிறுத்தப்படுவதால், திருச்சி - நெல்லை இன்டர்சிட்டி ரயிலை நீட்டிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பெங்களூர் மற்றும் ஓசூருக்கு மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 15 வருடங்களாக இந்த வழி தடத்தில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த பகுதி பயணிகளின் கோரிக்கை ஆகும்.
பல ஆண்டு கடுமையான போராட்டத்துக்கு பின் குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை 2010-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நாகர்கோவில் - பெங்களூர் வழி தடத்தில் 16538/37 எண் கொண்ட வராந்திர ரயில் மதுரை, ஈரோடு, ஓசூர் வழியாக வாராந்திர அறிவித்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பகல் நேர ரயிலாக இயங்கும் படியாக கால அட்டவணை அமைத்து இயக்குவதால் பெங்களூருக்கு செல்ல இந்த ரயிலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு சொல்லும் படியான எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த ரயில் மூலமாக நாகர்கோவிலிருந்து திண்டுக்கல் வரை இரண்டு மறுமார்க்கமும் பகல் நேரத்தில் வாராந்திர சேவை கிடைத்து வந்தது.
இந்த ஆண்டு 2013-ம் ரயில் பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் பன்சால் மூலம், நாகர்கோவில் - பெங்களூர் வழித்தடத்தில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த மற்ற அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டுவிட்டன ஆனால் இந்த பெங்களூர் ரயில் இன்று வரை இயக்கப்படவில்லை.
இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போதே இந்த ரயில் தற்போது இயங்கிகொண்டிருக்கும் வாராந்திர ரயிலை எந்த மாற்றமும் செய்யாமல் புதிய தடத்தில் (நாமக்கல் வழியாக) புதிய தினசரி ரயில் என்று தெளிவாக அனைவரும் புரியும் படியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் புதிய தினசரி ரயில் அறிவித்ததால் 2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த வாராந்திர ரயிலை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக தினசரி ரயில் மட்டும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கால அட்டவணையில் அறிவித்துள்ளனர்.
இந்த ரயில் பட்ஜெட் புத்தகத்திலும் புதிய ரயில்கள் சேவையின் கீழும் அறிவிப்பு உள்ளது. இவ்வாறு அறிவிக்கப்ட்ட ரயில் பட்ஜெட் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினார்களின் ஒப்புதல் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களும் இரண்டு ரயில்வே அமைச்சரால் வேவ்வேறு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு, வேவ்வேறு வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் தனி தனி சேவை ஆகும்.
இந்த புதிய தினசரி அறிவித்ததால் பழைய வாராந்திர ரயிலை ரத்து செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வாராந்திர ரயிலின் கடைசி சேவை இந்த வாரம் பெங்களூரிலிருந்து வியாழக்கிழமையுடன் (28-11-2013) முடிகிறது. மறுமார்க்கத்தில் இந்த சனிகிழமை (23-11-2013) நாகர்கோவிலிருந்து புறப்படுவதுடன் முடிகிறது.
இந்த வாராந்திர ரயிலை ரத்து செய்வதால் மதுரை - நாகர்கோவில் பகல்நேர சேவை கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இந்த வாராந்திர ரயிலின் சேவையை நிறுத்தும் போது அதற்கு மாற்று ஏற்பாடாக அனைத்து குமரி மாவட்ட மக்களின் தொடர் கோரிக்கையான திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை அடுத்த வாரம் நீட்டிப்பு செய்து விட்டு வாராந்திர ரயிலை நிறுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு இன்டாசிட்டி ரயிலை நீட்டிப்பு செய்ய முடியாத பட்சத்தில் இந்த வாராந்திர ரயிலின் சேவையை ரத்து செய்ய கூடாது. இதையும் மீறி இன்டாசிட்டி ரயிலை நீட்டிப்பு செய்யாமல் வாராந்திர பெங்களூர் ரயிலை ரத்து செய்தால் எங்களுடைய எம்.பி மூலமாக நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பி சபாநாயகர் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
நாகர்கோவில் - பெங்களுர் தினசரி ரயில்:
இந்த ஆண்டு அறிவித்த நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரயிலை கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே ரயில்வே துறை இன்டர்சிட்டி ரயிலை நீட்டிக்க முடியாத பட்சத்தில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த நாமக்கல் வழியாக இயங்கும் புதிய தினசரி ரயிலை தனி ரயிலாகவும் ஈரோடு வழியாக செல்லும் பழைய வாராந்திர ரயிலை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
கண்டுகொள்ளாத திருவனந்தபுரம் அதிகாரிகள்
பொதுவாகவே திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலிருந்து மதுரை மார்க்கமாக எந்த புதிய ரயிலையும் இயக்க திட்டகருத்துரு வைப்பதும் இல்லை, வேறு கோட்டங்கள் கருத்துரு வைத்தால் அதற்கும் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதும் அல்லது ஆர்வம் காட்டுவது இல்லை.
இந்த காரணத்தால் தான் கடந்த 2012-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் திருநெல்வேலியுடன் மூன்று ரயில்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.