குறைவான பயணிகளோடு இயக்கப்படும் பைபாஸ் ரைடர்கள்... எண்ணிக்கையைக் குறைக்க ஆலோசனை
நெல்லை: மதுரை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பைபாஸ் ரைடர் பஸ்களில் குறைந்த அளவு பயணிகளே பயணித்து வருவதால், அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க போக்குவரத்துக் கழகம் ஆலோசித்து வருகிறது.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி என மூன்று மண்டலங்கள் மூலம் 1953 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மற்றும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 பைபாஸ் ரைடர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மதுரைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இவை இடையில் எங்கும் நிற்காமல் செல்வதால் மூன்று மணி நேரத்தில் மதுரையை சென்றடைகிறது. இதனால் பைபாஸ் ரைடர் பஸ்சில் பயணம் செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெல்லையில் இருந்து மதுரைக்கு சாதாரண பஸ்சில் ரூ.95ம், பைபாஸ் ரைடரில் ரூ.105ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் விரைந்து செல்ல விரும்பியே கூடுதலாக ரூ.10 கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் பைபாஸ் ரைடர்கள் பஸ்களை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி பைபாஸ் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இதன் காரணமாக தற்போது பைபாஸ் ரைடர் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
பஸ்சை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், குடும்பத்துடன் பயணிக்க வசதியாக இருப்பதாலும் பல பயணிகள் ரயிலை நாடி செல்கின்றனர். இதனால், சமீபகாலமாக மதுரையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் பைபாஸ் ரைடர் பஸ்களில் பயணிகள் கூட்டம் சொற்பமாக உள்ளது.
ஏற்கனவே டீசல் விலை ஏற்றம், உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் போக்குவரத்து கழகங்கள் திண்டாடி வருகின்றன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போக்குவரத்து கழகம் திண்டாடி வருகிறது. இதனால் மதுரை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை நேரத்தில் மட்டும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அப்போது அதிக பஸ்களை இயக்கவும் மற்ற நேரங்களில் குறைந்த பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.