"வீட்டுக்கு அனுப்பப்படும்"னு திரும்பத் திரும்ப சொன்னாரே.. உடனே ஐடி வந்துருச்சே!
இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று அடிக்கடி தினகரன் கூறிவரும் நிலையில் இன்று ஐடி ரெய்டு அவரை புரட்டி போட்டுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று தினகரன் அடிக்கடி கூறி வந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் ஐடி ரெய்டு அவரை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு நடைபெற்றுள்ளது.
ஜெயலலிதா மறைந்தவுடன் தமிழகத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. முதல்வர் பதவிக்காக சசிகலா முயன்றார். ஆனால் கடைசியில் சிறைக்குப் போய் விட்டார்.
அவருக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்று தினகரன் திட்டமிட்டார். ஆனால் அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருந்தது.
இரட்டை இலை யாருக்கு
பிரிந்திருந்த அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து விட்டன. தினகரன் தனித்து விடப்பட்டு விட்டார். சசிகலா, தினகரனுக்கு எதிராக கடந்த அதிமுக பொது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாலும் ஏற்கெனவே இருந்த கருத்து வேறுபாட்டாலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக நடந்து கொண்டனர்.
எடப்பாடி மீது முறைகேடு புகார்
இந்நிலையில் எடப்பாடி ஆட்சி மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை தினகரன் தரப்பினர் எழுப்பி வந்தனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதிலும் இரு தரப்பும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது.
வீட்டுக்கு அனுப்பப்படும்
சசிகலாவின் தியாகத்தினால் அமைத்த இந்த துரோகிகளின் அரசு விரைவில் கவிழும் என்றும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் என்றும் அவ்வப்போது தினகரன் சூளுரைத்து வந்தார். ஆனால் தற்போது அவரை ஐடி ரெய்டுகள் சுற்றி வளைத்துள்ளன.
கண்ணில் விரலை விட்டு....
சசிகலாவை பெங்களூரில் சந்தித்து விட்டு கெத்தாக பேட்டி கொடுத்து விட்டு தினகரன் சென்னை திரும்பினார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்துக் கிடந்தது. சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 190 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் அடையாறில் உள்ள தினகரன் வீடும் தப்பவில்லை.