அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து தினகரனும் டிஸ்மிஸ்? வார்னிங் கொடுத்த தம்பிதுரை
டிடிவி தினகரனின் அரசியல் பயணம் முடிவை நோக்கி நெருங்குவதாகவே அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வரும் டிடிவி தினகரனின் துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்படலாம் என அதிமுக(அம்மா) கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு பல ஆண்டுகள் அரசியலில் எட்டிப்பார்க்க முடியாமல் முடங்கிக் கிடந்தவர் டிடிவி தினகரன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவுடன் கை கோர்த்து அதிமுகவை கபளீகரம் செய்ய துடித்தவர்களில் தினகரனும் ஒருவர்.
இதனால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதனிடையே சசிகலா சிறைக்குப் போக அவரால் துணைப் பொதுச்செயலரானவர் டிடிவி தினகரன். அவ்வளவுதான் அதிமுகவையும் ஆட்சியையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பகீரத முயற்சிகளை மேற்கொண்டார் தினகரன்.
ஆர்கே நகர் வேட்பாளர்
இதன் உச்சகட்டமாக ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தம்மையே வேட்பாளராகவும் அறிவித்துக் கொண்டார் தினகரன். இதை அதிமுக(அம்மா) அணி மூத்த தலைவர்கள் பலரும் ரசிக்கவில்லை.
உள்ளடி வேலைகள்
அத்துடன் ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுவாரோ என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ரொம்பவே அப்செட்டாகினர். இதனால் தினகரனை தோற்கடிக்க அமைச்சர்களே உள்ளடி வேலைகளையும் பார்த்து வந்தனர்.
சிக்கிய விஜயபாஸ்கர்
இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த சர்ச்சை வெடித்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வருமான வரித்துறையின் விசாரணையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் சிக்கினர்.
டெல்லி நெருக்கடி
இதனிடையே அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். ஆனால் விஜயபாஸ்கரோ அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டார். அவருக்கு டிடிவி தினகரன் முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
ரசிக்காத தம்பிதுரை
டிடிவி தினகரனின் இந்த பிடிவாதத்தை அதிமுக (அம்மா) கட்சி மூத்த தலைவர்கள் தம்பிதுரை உள்ளிட்டோர் ரசிக்கவில்லை. இப்படியெல்லாம் தன்னிச்சையாக செயல்பட்டால் கட்சி, ஆட்சி எதுவுமே இல்லாமல் போகும் என போனில் டிடிவி தினகரனிடம் கூறியிருந்தார்.
ரகசிய ஆலோசனை
அத்துடன் விஜயபாஸ்கரை நீக்க கோரும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக தம்பிதுரையை நேரில் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியும் வந்தனர். இதனைத் தொடர்ந்தே இன்று டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தம்பித்துரை ஆலோசனை நடத்தினார்.
நேருக்கு நேர் வார்னிங்
இப்படி மத்திய அரசுடன் பகிரங்கமாக மல்லுக்கட்டிக் கொண்டு கட்சியையெல்லாம் நடத்த முடியாது; முதலில் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதேபோல் நீங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களது கட்சி பதவிக்கும் எந்த வகையிலும் சிக்கல் வரலாம் என எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் தம்பிதுரை.
கடுப்பில் தினகரன்
உங்களுக்கு கட்சி பதவியே இல்லையெனில் அரசியல் எதிர்காலமும் இல்லாமல் போகும்.... பிரிந்து கிடக்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை ஆட்சியை நடத்த முயற்சிப்போம்... அதிமுக கட்சி, கொடி, சின்னத்தையும் மீட்கவும் முயற்சிப்போம் என கறாராக எச்சரிக்கை தொனியில் சொல்லிவிட்டாராம் தம்பிதுரை. தம்முடைய முகத்து நேராக கடுமையாக தம்பிதுரை எச்சரிக்கை விடுத்ததை தினகரன் விரும்பவில்லைதான்.
அஸ்தமனத்தை நோக்கி...
இருப்பினும் இரு அணிகளும் ஒன்றிணைந்து என்னை போகசொன்னால் நான் குட்பை சொல்வேன் என தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அந்த வாக்குமூலத்தைத்தான் கெட்டியாக பிடித்துக் கொண்டு நாங்க ஒன்றாக இருக்க நீங்க விலகிடுங்க என நெருக்கடி கொடுக்கிறாராம் தம்பிதுரை. அரசியலில் மீண்டும் தலையெடுத்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் அஸ்தமனத்தை நோக்கி போகிறது தினகரனின் பயணம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.