ஆமா தினகரன் எந்த நாட்டு குடிமகன்... அந்த குழப்பத்துக்கே விடை தெரியலையே
ஆர்கே நகரில் போட்டியிடும் டிடிவி தினகரன் எந்த நாட்டு குடிமகன் என்ற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்கவில்லை.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் எந்த நாட்டு குடிமகன் என்ற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்கவில்லை.. இந்த விவகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்ட இருக்கிறது ஓபிஎஸ் அதிமுக.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் சசிகலா அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிட உள்ளார்.
போட்டியிட முடியாது
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளி என்பதால் டி.டி.வி. தினகரன் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடவே முடியாது. இருந்தபோதும் தாம் போட்டியிடுவேன் என கூறி வருகிறார்.
எந்த நாட்டு குடிமகன்
இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்கிறது ஓபிஎஸ் அதிமுக. அதேபோல் டி.டி.வி. தினகரன் எந்த நாட்டு குடிமகன் என்ற குழப்பத்துக்கும் இன்னமும் விடை கிடைக்கவில்லை.
காபிபோசா
1996-ம் ஆண்டு காஃபிபோசா சட்டத்தின் கீழ் தினகரன் கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஆர். மகாதேவன் முன்பாக ஒரு ரிட் மனுவை டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்தார். அம்மனுவில் தாம் இந்திய குடிமகனே அல்ல என டி.டி.வி. தினகரன் தரப்பில் வாதிடப்படவில்லை. அதேபோல் 1995-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தினகரனோ, தாம் இந்திய குடிமகன் என வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
பெரா வழக்கு
ஆனால் பெரா வழக்கில் தாம் இந்திய குடிமகனே அல்ல; சிங்கப்பூர் குடிமகன் வாதிட்டார் டி.டி.வி. தினகரன். இதை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் இந்திய குடிமகன் என கூறிவிட்டு குற்ற வழக்கில் தாம் சிங்கப்பூர் குடிமகன் என வெவ்வேறான நிலைப்பாடு மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என கூறி தினகரன் வாதத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
ஆக தினகரன் இந்திய குடிமகனா?சிங்கப்பூர் குடிமகனா? எனா முதலில் விடைகிடைக்க வேண்டும்.