ஆர்.கே.நகரில் மண்ணைத்தான் கவ்வ போறீங்க.. உளவுத்துறை எச்சரிக்கை- டிடிவி தினகரன் ஷாக்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயிப்பதை கவுரவப் பிரச்சினையாக கருதும் டிடிவி தினகரனுக்கு உளவுத்துறை கூறி வரும் கருத்துக்கள் எல்லாம் சாதகமாக இல்லையாம். இதனால் கலக்கத்தில் இருக்கிறாராம்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் களம் படு பரபரப்படைந்துள்ளது. அதிமுகவின் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு உளவுத்துறையினர் கூறியுள்ள தகவல் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் களம் காண்கின்றனர். திமுக சார்பில் வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் மதிவாணனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களத்தில் உள்ளார். பாஜக, மக்கள் நலக்கூட்டணி இதுவரை தங்களின் முடிவுகளை அறிவிக்கவில்லை. ஆர். கே. இப்போது வரை 5முனை போட்டி நிலவுகிறது.

மக்கள் செல்வாக்கு யாருக்கு?
சசிகலா அணிக்கும், ஓபிஎஸ் அணிக்கும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி தோல்வி ஒருபக்கம் இருந்தாலும் அதிமுக தொண்டர்களின் செல்வாக்கு எந்த அணிக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் தேர்தலாக உள்ளது.

உளவுத்துறை தகவல்
சமீபத்தில் ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் உளவுத்துறை நடத்திய ஆய்வில் டிடிவி தினகரனுக்கு எதிராக மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மக்களின் எண்ணங்களை அறிக்கையாக வடிவமைத்து ஆட்சியாளர்களிடம் அளித்துள்ளதாம், அதில் அதிமுக ஓபிஎஸ் அணிக்கும் திமுகவுக்கும் தான் உண்மையான போட்டி என்று கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிடிவி தினகரன் கலக்கம்
டிடிவி தினகரன் ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளை பெற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளதாம். இந்த அறிக்கையால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா அணியின் நிலை
ஆர்.கே. நகரில் சசிகலாவிற்கு எதிராக தொண்டர்கள் மனநிலை உள்ளது என்பது தெரிந்தும் டிடிவி தினகரன் துணிச்சலாக போட்டியிடுகிறார் என்றால் 'வைட்டமின் ப' பலத்தில்தானாம். எப்பாடு பட்டாவது ஜெயிக்க வேண்டும், சட்டசபைக்குள் எம்எல்ஏவாக செல்ல வேண்டும் என்று கூறி வருகிறாராம். ஆர்.கே. நகரில் வெற்றி பெற்று விட்டார் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பத்தின் மீதான பழியை துடைத்து விடலாம் என்று கணக்கு போட்டுதான் போட்டியிடும் முடிவை எடுத்தாராம் தினகரன்.

இரட்டை இலை
ஆர். கே. நகர் அதிமுக தொண்டர்களுக்கு இரட்டை இலைதான் பிரதானம். அந்த சின்னத்திற்காகவே வாக்களிப்பார்கள். கூடவே தற்போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொடுத்துள்ள 5000 ரூபாயும் கூடுதல் அட்வாண்டேஜ் என்று கூறி வருகின்றனர் சசிகலா அணியினர். எனவேதான் இரட்டை இலையை தங்கள் வசம் வைத்துக்கொள்ள போராடி வருகின்றனர்.

மண்ணின் மைந்தன்
ஓபிஎஸ் அணியோ மண்ணின் மைந்தன் முழக்கத்துடன் மதுசூதனனை களமிறக்கியுள்ளது. அவரும் படு சுறுசுறுப்பாக டிடிவி தினகரனை தோற்கடித்தே தீருவேன் என்று கூறியுள்ளார். திமுகவும் மண்ணின் மைந்தன் முழக்கத்துடன் மருதுகணேஷை களமிறக்கியுள்ளது. யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்களோ? அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறதோ? ஏப்ரல் 12ஆம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications