தூதுவிட்ட தினகரன்.. ஏற்க மறுத்த எடப்பாடி.. இனி கச்சேரி ஆரம்பம்
Recommended Video

சென்னை: என்னை முதல்வராக்குங்கள், சமாதானமாக போய்விடலாம் என்ற டிடிவி தினகரன் யோசனையை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமாதான முயற்சி தோற்றதும், போருக்கான சங்கநாதம் முழங்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதுமே, தான்தான் முதல்வர் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம் தினகரன்.

உற்சாகம், கும்மாளம்
மத்திய, மாநில அரசுகள் போட்ட முட்டுக்கட்டைகள், தேர்தல் ஆணைய கெடுபிடிகளை தாண்டி, ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றி தினகரனுக்கும், அவரது ஆதரவாளர்களும் அளவில்லாத உற்சாகத்தை அளித்து உள்ளது. இதனால், அவர்களின் அடுத்த குறி, கோட்டை நாற்காலிதான். இதையடுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் தூது விடுகிறதாம் தினகரன் தரப்பு.

பாஜகவிடம் சமாதானம்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம், அதிமுக தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது நிரூபணமாகிவிட்டதால், எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள், நாங்கள் எடப்பாடி இடத்தில் இருந்து உங்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம் என்பதை மறக்காதீர்கள், என்று தினகரன் தரப்பு தூதுவர் பாஜக தலைமையை அணுகியதாக தகவல்கள் கூறுகின்றன.

பாஜக எதிர்ப்பு
சசிகலா, தினகரனின் சாமர்த்தியங்களை அறிந்த பாஜக, இதற்கு உடன்படவில்லை என தெரிகிறது. தங்கள் கட்சியை பலப்படுத்த தினகரன் அணி உதவாது, மேலும் பலவீனப்படுத்திவிடும் என்று பாஜகவில் சில தலைவர்கள் கருதுகிறார்கள். தினகரனுடன் நாங்கள் மோதல் போக்கையே கடைபிடிக்கிறோம் என்பதற்கான சமிக்ஞையை இரு நாட்களுக்கு முந்தைய, சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடைபெற்ற, ஐடி ரெய்டு மூலம் உறுதி செய்துள்ளனர் மத்திய ஆட்சியாளர்கள்.

சீட்டை கொடுங்க
ஒருபக்கம் மத்தியில் தூதுவிட்ட தினகரன் தரப்பு, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு அன்பு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. "நீங்களா விட்டுத்தந்தா வரலாறு, நாங்களாக பறித்தால் தகராறு" என தினகரன் தரப்பு கூற, முடிந்ததை பார்த்துக்கொள்ளவும் என மறுதரப்பில் இருந்து பதில் வந்துள்ளதாம்.

முக்கியமான தீர்ப்பு
எடப்பாடி, பன்னீர்செல்வம், ஜெயக்குமார் போன்ற ஐந்தாறு பேருதான் தங்களுக்கு எதிராக உள்ளனர். பிறர் மதில்மேல் பூனைதான். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என நீதிமன்றம் கூறியதும் அவர்கள் தங்கள் பக்கம் வந்து தன்னையை முதல்வராக முன்மொழிவார்கள் என்பதே தினகரன் கணக்கு.

அரசியல் வாழ்க்கை
ஆட்சி கலைந்துபோனாலும் போகட்டும், தினகரன் முதல்வரானால் நமது கதி, அதோ கதிதான் என்பதில் தெளிவாக உள்ளது இந்த தரப்பு. தினகரன் தலையெடுத்தால் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கை முடித்து வைக்கப்படும் என்ற அச்சம், அவர்கள் ஆதரவாளர்களுக்கு உள்ளது. ஏனெனில் இவ்விருவரும் தங்கள் குடும்பத்திற்கு எதிராக திரும்பியதை தினகரன் மன்னிக்கப்போவதில்லை என்பதே அவர்கள் கணக்கு.

சீறிய முதல்வர்
தினகரனிடம் சமாதானமாக போய், பிறகு செல்வாக்கு இழப்பதைவிட மோதிப்பார்ப்போம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டாராம். நேற்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய பழனிச்சாமி, தினகரன் ஹவாலா முறையில் பணத்தை வாரி இறைத்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இனி கச்சேரிதான்
சமாதானத்திற்கு வழியில்லை என்பதால், தினகரன் தனது சித்து வேலைகளை இனி ஆரம்பிக்க உள்ளார். ஆரம்பித்தும்விட்டார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். இதையடுத்து, தமிழக அரசியலில் இனி கச்சேரி களை கட்டப்போகிறது என்று கண் சிமிட்டுகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications