ஹீரோவும் நானே... வில்லனும் நானே... டிடிவி தினகரனின் தனி ஆவர்த்தனம்
அதிமுகவில் ஹீரோவும் நானே... வில்லனும் நானே... என்று ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வலம் வரவேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
சென்னை: தனி அணி எல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே, நாங்க தனிதான் என்று நிரூபித்துள்ளார் டிடிவி தினகரன். ஜனாதிபதி தேர்தலில் தனியாக ஒரு ஆதரவு அறிக்கை விட்டு தனி அணிதான் என்று ஊருக்கே பறைசாற்றியிருக்கிறார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஒற்றுமையாக ஓரணியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள், இப்போது தனி தனியாக சிதறியுள்ளனர். ஓபிஎஸ், சசிகலா அணிதான் இருந்தது. இப்போது சசிகலா அணியே இரண்டாக உடைந்து ஈபிஎஸ், டிடிவி தினகரன் அணியாகி விட்டது.
எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் நாற்காலி இப்போது தினகரனின் தலையசைப்பில் இருக்கிறது. அவருக்கு ஆதரவாக 34 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.

தனி ஆவர்த்தனம்
டிடிவி தினகரன் தினசரியும் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். எம்எல்ஏக்கள் தினசரியும் அவரை பார்த்து பேச போவதால் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கை பல காலியாகவே இருக்கிறது.

தங்கத்தமிழ் செல்வன்
ஆரம்பம் முதலே டிடிவி தினகரன் ஆதரவாளராக காட்டி வருபவர் தங்கத்தமிழ் செல்வன். 34 பேர் அடுத்தடுத்து ஆதரவு நிலை எடுத்தாலும் சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான பகிரங்க எதிர்ப்பு நிலையை அறிவித்தவர். அவரைப் போலவே 34 பேரும் வெளிநடப்பு செய்ய ரொம்ப நேரம் ஆகாது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் டிடிவி தினகரன்.

எம்ஜிஆர் பிறந்தநாள்
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா தனது முன்னிலையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் தினகரன், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று ஊடகங்களில் மிகப்பெரிய விளம்பரம் கொடுத்து விட்டனர். இதுவேறு எரிச்சரை ஏற்படுத்தி விட்டதாம். இதனையடுத்தே அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக சட்டசபையை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனராம். இதுவும் ஒருவித நெருக்கடிதான் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்று சசிகலா சொல்லி அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நினைத்தார் தினகரன். ஆனால் அதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமியே அறிக்கை அளிக்க, அது கோபத்தை ஏற்படுத்தி விட்டதாம்.

ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
டிடிவி தினகரனின் கருத்தை பிரதிபலிக்கும் விதமாகவே முதலில் கருணாஸ் பேட்டி கொடுத்தார். அவருக்கு பின்னர் ஒவ்வொரு எம்எல்ஏவாக பேசினார்கள். பாஜகவே தினகரன் தனி அறிக்கை தரவேண்டும் என்று எதிர்பார்த்தாக சொல்கின்றனர். அதை முதலில் வெளிப்படுத்தியவர் முரளிதரராவ்.

அறிக்கை வெளியிட்டது எப்படி?
தினகரனுடன் பாஜக தலைவர்களில் ஒருவர் பேசி இருக்கிறார். இப்போ இருக்கும் சூழ்நிலையில் நீங்களும் ஒரு அறிக்கை விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் தினகரனிடம் இருந்து நேற்று பிற்பகலில் அறிக்கை வந்தது. எது எப்படியோ ஒன்றாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டே தனி தனியாக அறிக்கை வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

ஹீரோ கம் வில்லன்
சட்டசபையில் எம்எல்ஏக்கள் தனி அணியாக இயங்க ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.
இப்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை காப்பாற்றும் ஹீரோவும் டிடிவி தினகரன்தான். அவரது ஆட்சியை கவிழ்க்கப் போகும் வில்லனும் தினகரன்தான் என்கின்றனர் தமிழக அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications