சிதம்பரம் அருகே பெண் கொலையில் திடீர் திருப்பம்.. கள்ளக் காதலன் உள்பட இருவர் கைது
சிதம்பரம் அருகே மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவளது கள்ளக்காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்: புதுச்சத்திரம் அருகே பெண் காயங்களுடன், மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு 12.30 மணிக்கு 36 வயது மதிக்கத்தக்க பெண் சாலையோரத்தில் இறந்து கிடப்பதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடல் அருகில் தடயங்கள் ஏதாவது உள்ளதா என ஆய்வு செய்தனர். இறந்த பெண்ணின் நெற்றி மற்றும் உதட்டின் கீழே காயமும் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடயமும் இருப்பது தெரிந்தது. இறந்த பெண் ரோஸ் கலர் ஜாக்கெட்டும், அதே கலரில் வெள்ளை பூ போட்ட புடவையும் கட்டியிருந்தார்.
ஆனால் அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எஸ்.பி., விஜயகுமார், சிதம்பரம் ஏ.எஸ்.பி., நிஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் திடீர் திருப்பமாக அந்த பெண் கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் செல்வி என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடலூர் அரசு அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த பாலசுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கும், அவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனியார் காவலாளி அருள் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.