தமிழக வாலிபரை காதலித்து கரம்பிடித்த உகாண்டா நாட்டு பெண்
வேலூர்: உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் தமிழக வாலிபர் ஒருவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். அவர்களின் திருமணம் இந்து முறைப்படி சொந்த கிராமத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்தவர் மணி. அவரது மனைவி ராதா. இவர்கள் விளாப்பாக்கத்திலேயே ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன் கலாநிதி (30). ‘லெதர் டெக்னாலஜி' மற்றும் ‘பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன்' படித்தவர். அவர், கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதியன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டிற்கு வேலைக்காக சென்றார்.
கலாநிதி வேலைக்கு சென்ற இடத்தில் மொழி, வேலை மற்றும் உணவு பழக்கவழக்கங்களும் பிரச்சினையாக இருந்துள்ளது. எனவே, வேலைக்கு சென்ற ஒரு வார காலத்திலேயே கலாநிதி தனது சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டார்.
அப்போது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உகாண்டாவை சேர்ந்த இசன்யூஆரியட் என்ற பெண்ணுடன் கலாநிதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
கலாநிதிக்கு, இசன்யூ ஆரியட் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். நாளடைவில் அவர்கள் இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்களின் காதலை இசன்யூஆரியட்டின் பெற்றோர்களான ஓரிட் பேசில் எமெயூ, அனேகிரேஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து கலாநிதி- இசன்யூ ஆரியட் திருமணத்திற்கு இசன்யூஆரியட்டின் பெற்றோரும், சகோதரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி கலாநிதி தனது சொந்த ஊரான விளாப்பாக்கத்திற்கு வந்தார். பின்னர் உகாண்டா செல்லாமல் ராணிப்பேட்டையில் தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
உகாண்டாவில் இருந்தபோது தான் காதலித்து வந்த இசன்யூ ஆரியட் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கலாநிதியின் பெற்றோரும் இந்த காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக காதலர்கள் செல்போனிலேயே தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இசன்யூ ஆரியட் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கலாநிதியை திருமணம் செய்து கொள்ள விளாப்பாக்கத்திற்கு வந்தார்.
அதைத்தொடர்ந்து ஆற்காட்டை அடுத்த விலாரி கிராமத்தில் சொக்கநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி கலாநிதி- இசன்யூ ஆரியட் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது மணமகன் கலாநிதி பட்டு வேட்டி- சட்டையும், மணமகள் இசன்யூஆரியட் கூரப்புடவையும் அணிந்திருந்தனர். மணமகன் கலாநிதி, மணமகள் இசன்யூ ஆரியட் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் ஆன தாலியை கட்டினார். பின்னர் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழ்நாட்டிற்கு வந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பின்னரும் மணமக்கள் உகாண்டா செல்லாமல் இங்கேயே வசிக்கப் போவதாகவும், இசன்யூ ஆரியட்டிற்கு ‘கிரீன்கார்டு' எனப்படும் குடியுரிமை பெறப்போவதாகவும் மணமகன் கலாநிதி தெரிவித்தார்.