வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ....!
கரூர்: கண்டதையும் வாயில் போட்டு மென்று புற்றுநோய் உள்ளிட்டவற்றை வலியக்க வரவழைத்துக் கொள்ளும் இக்காலத்து மக்கள் மத்தியில் உடலுக்கு நலன் பயக்கும் வெற்றிலைக்கு மவுசு குறைந்து போய்க் கொண்டிருப்பது வெற்றிலை விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியான விருந்துக்குப் பிறகும், ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகும் மக்கள் கைகளில் தவறாமல் புழங்குவது வெற்றியைும், சுண்ணாம்பும்தான்.
ஆனால் இதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லக் கூடிய காலம் இப்போது வந்து விட்டது. பான்பராக், குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வடமாநில புகையிலை பொருட்கள் வரவால், உடலுக்கு நன்மை பயக்கும் வெற்றிலை பயன்பாடு குறைந்து வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
1500 ஏக்கரில் வெற்றிலை விவசாயம்
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம், வேலூர், வேலாயும்பாளையம், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, திருக்காம்புலிய+ர் ஆகிய ஊர்களில் சுமார் 1500 ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடி, பச்சைகொடி
வெற்றிலையில் வெள்ளைக்கொடி, பச்சைகொடி, கற்பூரம் ஆகிய ரகங்கள் உள்ளது. கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு வரை கரூர் மாவட்டத்திலிருந்து மும்பை, கொல்கத்தா, இந்தூர் போன்ற வெளி மாநில நகரங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
100 வெற்றிலை ஒரு கவுளி
100 வெற்றிலை கொண்டது ஒரு கவுளி எனப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 105 கவுளி கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ.5000 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது வெற்றிலை கட்டு ரூ.1500 முதல் ரூ2500 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.
கம்பெனிக்குக் கட்டுப்படியாகவில்லை
இதனால் பராமரிப்பு செலவு மற்றும் வெற்றிலை பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். "வட மாநிலங்களில் பயன்படுத்தும் பான்பராக், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் தமிழ்நாட்டிலும் அதிகமானதால் வெற்றிலையை பயன்படுத்துவோர் குறைந்து விட்டனர்.
புகையிலைக்கு முழுத் தடை இல்லையே
புகையிலை பொருட்களால் கேன்சர் போன்ற உடலுக்கு தீங்குவிளைவிக்கும் நோய்கள் உண்டாவதால் இந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த பொருட்கள் விற்பனை முழுவதும் தடைசெய்யப்படவில்லை.
நலம் பயக்கும் வெற்றிலை
மேலும், வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைத்து மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை மூலிகை தயாரிக்க வேண்டும்" என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சளி இருமலுக்கு பெஸ்ட்!
"சளி. இருமல், சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, அலர்ஜி, ரத்தஓட்டம் தடைபடுதல் போன்ற நோய்களை குணப்படுத்தக் கூடியது வெற்றிலை.
கொட்டப் பாக்கும்.. கொழுந்து வெத்தலையும்...!
வெற்றிலை, உடலுக்கு செரிமான சக்தி கொடுக்ககூடியது. பாம்பு கடித்தால் வெற்றிலை சாறு குடிக்க கொடுத்தால் விஷம் குறையும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெற்றிலையை புறக்கணித்து வரும் பொதுமக்கள், இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, சாப்பாடு சாப்பிட்ட பின்னர் தினமும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் வலிமை பெறும் இவ்வாறு சித்த மருத்துவர்களும் ஆலோசனை கூறுகின்றனர்.