ஜெ.க்கு வழங்கப்பட்ட இசெட் பிளஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது..போயஸ் இல்லத்தில் மட்டும் போலீஸ் குவிப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இசெட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்ட நிலையில், போயஸ் இல்லத்தில் பாதுகாப்புக்காக, குவிக்கப்பட்டிருந்த போலீசாரும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு மத்திய அரசு வழங்கியிருந்த இசெட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தமிழக போலீசார் போயஸ் தோட்டம் இல்லத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலும், உளவுத்துறை தகவல் அடிப்படையிலும், அவருக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
நீண்ட காலமாகவே இந்த பாதுகாப்பு வளையத்தில்தான் அவர் இருந்தார். இசெட்பிளஸ்தான் இருப்பதிலேயே உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இப்பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களை சுற்றிலும், 40 பாதுகாப்பு வீரர்கள் இருப்பர். 2 எஸ்கார்ட் வாகனங்களும் இருக்கும். இதுதவிர தமிழக காவல்துறையினர் பலரும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கினர்.
நல்லடக்கம்
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் அன்று இரவே, போயஸ் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை சுற்றிலும் இசெட் பிளஸ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு சென்றனர். டிசம்பர் 6ம் தேதி ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு இசெட்பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
போலீஸ் குவிப்பு
அதேநேரம், போயஸ் இல்லத்தில், தமிழக போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து வந்தது. தமிழக காவல்துறை சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏறத்தாழ 240 பேர் இன்னமும் பணியில் இருந்தனர்.
இவர்களில் ஒரு சூப்பிரண்டெண்டண்ட் (கண்காணிப்பாளர்), 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர்கள், 7 ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) இருந்தனர். மற்றவர்கள் துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்), தலைமைக் காவலர்கள், கான்ஸ்டபிள்கள் ஆகியோராவர்.
நிரந்தரமாக வசிப்பு
இவர்களில் பலர் மூன்று ஷிஃப்டுகளில் போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியை இன்னமும் மேற்கொண்டிருந்ததுடன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டனர். அடையாறு போட் கிளப் ஏரியாவில் சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு உள்ள மருதம் வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் மெஸ்ஸிலிருந்து இவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு வேளையும் வழங்கப்பட்டது.
கூடுதல் ஊதியம்
இந்தப் பணிக்கான ரிஸ்க் அலவன்சாக அவர்களின் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.6000 பெற்றனர். அத்துடன், அவர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் சென்னை மாநகரத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் காவலருக்கான குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு பணி சார்ந்த எந்த அலுவலாக இருந்தாலும் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.
பிற போலீசாருக்கு இல்லை
மரணமடைந்தவரின் பெயரில் பாதுகாப்பு பணி என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி, சட்டம்-ஒழுங்கு காக்கும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் தினந்தோறும் கடுமையாகப் பணியாற்றும் காவல்துறையின் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்களுக்குக் கூடக் கிடைக்கவில்லை. இதை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தார். இந்த பாதுகாப்பு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு வழங்கப்படுவதுதான் வியப்பு என மக்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், விமர்சனங்கள் அதிகரித்ததால் இன்று மதியம் முதல், போயஸ் கார்டனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. போயஸ் இல்லத்திற்கு தனியார் பாதுகாப்பு ஏஜென்சியிடமிருந்து பாதுகாவலர்களை சசிகலா பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.