இல்லாத இடத்தில் கொசுவைத் தேடும் அதிகாரிகளே... பாதிக்கப்பட்ட ஊரப்பாக்கத்தையும் கண்டுக்கங்க!
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு முன்னர் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் டெங்கு அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் : டெங்கு கொசுவைத் தேடி அபராதம் விதிக்கும் அதிகாரிகள் முறையான கழிவு நீர்ப் பாதை அமைக்காததால் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் ஊரப்பாக்கம் பகுதியை புறக்கணிப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் இடங்கள் என்று தேடி அலைந்துஅதிகாரிகள் கொசுவை வளர்க்கும் இடம் என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் எத்தனை முறை புகார் அளித்தும் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரில் உள்ள பாரி வள்ளல் தெருவில் கழிவு நீர் வடிகால் வழி ஏற்படுத்தப்படவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் வடிகால் வழி இல்லாததால் இந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அருகில் உள்ள காலிமனையில் சாக்கடை நீரை வெளியேற்றி வருகின்றன. இதனால் இந்தப் பகுதியே கொசு உற்பத்திக் கூடாரமாகியுள்ளது என்பது இந்தப் பகுதி மக்களின் புகார்.
தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு, மலேரியா அச்சம் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு இந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர் மக்கள். மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீருடன் சாக்கடை கழிவுகளும் கலப்பதால் தேங்கி நிற்கும்கழிவு நீரில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட பயங்கர ஊர்வன நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதியில் வயது முதியோர், குழந்தைகள் என அனைவரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அன்றாடம் வாழ்நாளை கழிப்பதே கஷ்டமாகிவிட்டதாகவும், உயிர் வாழவே அஞ்சும் நிலையில் நாட்களை கடத்தி வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பஞ்சாயத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதி மக்களை காக்க வேண்டும் என்று வாசகர் டி. கபிலன் நமக்கு அனுப்பியுள்ள தகவலில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications