கலவரம் ஏற்படட்டுமென்று அன்புமணி காரில் கல்வீசியுள்ளனர்: வைகோ
சென்னை: ரணகளமும், கலவரமும் ஏற்படட்டுமென்று அன்புமணி ராமதாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் மீது கொலை வெறி நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கற்பனை செய்வதற்குக்கூட முடியாத பெரும் பின்விளைவு பாதகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடிய நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் பயணித்த டெம்போ டிராவலர் வாகனத்தில் முன் இருக்கையில் அன்புமணி ராமதாஸ் அமர்ந்திருந்த நிலையில், இரண்டு கிலோவுக்கு மேல் எடையுள்ள கூர்மையான கருங்கல் அவரைக் குறி பார்த்து வீசப்பட்டுள்ளது.
கண்ணாடியை உடைத்துக்கொண்டு கல் உள்ளே போய் விழுந்திருக்கிறது. இயற்கை அன்னையின் கருணையால் அன்புமணி ராமதாஸ்உயிருக்கு ஆபத்து நேரவில்லை.
இந்தக் கொலைவெறி வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் திட்டமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும். ரணகளமும், கலவரமும் ஏற்படட்டும் என்று எண்ணி திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை இச்சம்பவம் ஏற்படுத்திய போதிலும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தோழர்களும், பொதுமக்களும் அமைதி காக்க அன்புடன் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.