சதானந்த கெளடாவை எதிர்த்து அதிமுகவினர் ஒரு போராட்டம் கூட நடத்தாதது ஏன்.. வைகோ கேள்வி
கரூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக பெரும் போராட்டம் மற்றும் வன்முறையில் குதித்துள்ள அதிமுகவினர், காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தடுக்க முடியாது, நிச்சயம் கட்டியே தீருவோம் என்று கூறியுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கெளடாவுக்கு எதிராக கொந்தளிக்காதது ஏன்.. ஒரு போராட்டம் கூட நடத்தாது ஏன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
கரூர் அருகே தென்னிலை பகுதியின் அருகே உள்ள பெரிய திருமங்கலத்தில் மதிமுக சார்பில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 8 வது தொண்டரணி பயிற்சி முகாம் கடந்த 16 ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.
இப்பயிற்சி முகாமை முடித்து வைக்க வருகை தந்த வைகோ பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ராஜபக்சே தோற்றது மட்டுமே மன ஆறுதல்
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ராஜபக்சே பிரதமர் ஆவது தோற்கடிக்கப்பட்டது என்பது மட்டுமே மன ஆறுதல் வந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சே இருந்தும் தமிழர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை.
ஒன்றும் நடக்கப் போவதில்லை
தற்போது இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ரணில் வந்தாலும், ராஜபக்சே வந்தாலும் தமிழர்களுக்கும் ஒன்றும் நடக்க போவதில்லை. சிறிசேனா வந்த பிறகும், தமிழர்களுக்கான அதிகார பகிர்வுகள் எதுவும் செய்து கொடுக்க வில்லை, கிழக்கு பகுதியில் ஒரு சதவிகிதம் இருந்த சிங்களர்கள் இன்று 36 சதவிகிதம் அங்கு இருக்கிறார்கள். சிங்களர்கள் அங்கு குடியமர்த்தியிருக்கிறார்கள்.
சிங்களர்களின் கையில் தமிழர்களின் தாயகம்
தமிழர்களின் தாயகப்பகுதி சிங்களரின் குடியேற்றமாக மாறிவிட்டது. தெருக்கள் தோறும் சிங்கள ராணுவம் உள்ளது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வட கிழக்கு மாகாணங்களில் எந்த ஒரு மதுபானக்கடையோ, பாலியல் வன்முறையும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுபானக்கடைகள் அதிகரித்ததோடு, பாலியல் வன்முறைகளும் அங்கு அரங்கேறி வருகின்றன.
ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்
சிங்கள ராணுவம் அங்கு இருந்து வெளியேற்றப்பட வேண்டும். சிங்கள குடியிருப்புகள் வெளியேற்றப் பட வேண்டும். அது போல உள்நாட்டு விசாரணை கூடாது. உலகளவில் தமிழக ஈழத்தை பற்றியும், ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை வெளிக் கொணரும் வகையில் தமிழக இளைஞர்கள் மாணவர்கள் முன் வந்து உலகளவில் கருத்தரங்கு நடத்த வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.
அதிமுக எங்கே போனது
ஈழத்து சொந்தங்களை கொன்று குவித்த போது ஏன் அதிமுகவினர் ஒரு ஆர்பாட்டம் கூட நடத்தவில்லை. கண்டன குரல் கூட கொடுக்கவில்லை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசியதற்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்- அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.
கொடும்பாவி எரிப்பது ஏன்
அதை விட்டு விட்டு, தொடர்ந்து கண்டனம் மற்றும் கொடும்பாவி எரிப்பு சம்பவங்கள், அவரை (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை) கொல்லுவதற்கு சமமான வேலையாகும். ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டுவது உறுதி என கூறிய மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியதற்கு எந்த ஒரு ஆர்பாட்டத்தில் கூட அதிமுகவினர் ஈடுபடாதது ஏன்.
கெளடாவை எதிர்த்துப் போராட வேண்டியதுதானே
சதானந்தா கவுடா இந்த மாதிரி சொன்னதற்கு ஒரு கண்டனம் தெரிவித்து ஒரு ஆர்பாட்டம் நடத்தி இருந்தால் நான் தெருவிலேயே மேடை போட்டு பாராட்டி இருப்பேன். ஆனால் இவ்வளவு பெரிய அழிவு நடந்து வருகிறது. அதை தடுக்க அதிமுகவினர் முன் வரவில்லை. ஏன் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பெண்களுக்கான பார் ஒன்று செயல்படுகிறதாம். இது தான் அரசின் சாதனையா?
மாணவர்களே வீதிக்கு வாருங்கள்
மாணவர்களே, இளைஞர்களே வீதிக்கு வாருங்கள். மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்த வாருங்கள். அரசியலால் மதுக்கடைகளை ஒழிக்க முடியாது. அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வன்முறை வேண்டாம். வரும் செப்டம்பர் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி திருப்பூரில் நடைபெற உள்ள மதிமுக மாநாடு அரசியல் வரலாற்றையே திருப்பி பார்க்க வைக்கும். வைர எழுத்துக்களால் இந்த மாநாடு அமையும். இம்மாநாடு ஈழத்தமிழர்களின் பிரச்சினையை பற்றியே அமையும். இம்மாநாடு திராவிட அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தும், பொன் எழுத்துக்கள் அல்லாது வைர எழுத்துக்களால் பொறுத்திருப்பது போல அமையும் என்றார்.