மாச்சரியங்களைக் களைந்து தமிழர்களாக ஓரணியில் எழுந்து நிற்போம்.. வேல்முருகன் பொங்கல் வாழ்த்து
சென்னை: பொங்கல் திருநாளில், மதம், ஜாதி, மதுவற்ற- நம் வாழ்வுரிமைகளுக்காக அனைத்து மாச்சரியங்களையும் களைந்து தமிழர்களாக ஓரணியில் திரளுகிற தமிழினமாக ஒற்றுமையுடனும் ஓர்மத்துடனும் எழுந்து நிற்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர் திருநாள் - இனிய தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தொல்குடியாம் தமிழர் பெருங்குடியின் முதன்மை விழா பொங்கல் திருநாள் விழா. தமிழர் நம் வாழ்வுக்கும் வளத்துக்கும் உற்ற உறுதுணையான இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் விழா எடுத்து சிறப்பிக்கும் தமிழர் வாழ்வின் தலைமைத் திருவிழாவே இப்பொங்கல் பெருவிழா.
அண்மையில் நம்மை தாக்கிய இயற்கை பேரிடர் பெருந்துயரம் அகன்றுவிடாத நிலையிலும் இதோ வருகிறது நம் தமிழினத்தின் முதன்மை விழா தைப் பொங்கல் திருநாள் விழா!
தமிழினத்தின் பல்லாயிரம் ஆண்டுகால இப் போற்றுதலுக்குரிய பண்பாட்டை ஏதோதோ காரணங்களின் பெயரால் முடக்கி வைத்துவிடலாம் என்கிற சதிச் செயலோடு தமிழினப் பகைவர்கள் களமிறங்கியுள்ளனர். நம்மினத்தின் வரலாற்றில் நாம் சந்தித்த சதிகளும் துரோகங்களும் ஏராளம்... ஆனால் இத்தகைய சூழ்ச்சிகள் அனைத்தையும் தீரமுடன் எதிர்த்து நின்று வீழ்த்தி தமிழருக்கே உரித்தான இனமானத்தையும் வீரத்தையும் நிலைநாட்டுவோம் என இந்தத் தமிழர் திருநாளில் சூளுரையேற்போம்!
தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதையும் தமிழர் தம் சுயமரியாதை, இனமானம், வாழ்வுரிமைகளைப் போற்றிப் பாதுகாப்பதையும் நம் வாழ்வின் பெருங்கடமையாக இத்திருநாளில் உறுதியேற்போம்!
21-ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமாக ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களை தமிழீழத் தாயகத்தில் இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிறுத்தவும் தமிழீழத் தாயகத்தை வெல்வதற்காகவுமான நமது நீதிக்கான நெடும் பயணத்தை முனைப்புடன் முன்னெடுப்போம்!
கால் நூற்றாண்டுகாலமாக நீதி மறுக்கப்பட்டவர்களாக கொடுஞ்சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை சிறைமீட்டு நீதியை நிலைநாட்டுவோம் என்பதையும் நம் தமிழர் திருநாள் உறுதிமொழியாகக் கொள்வோம்!
மதம், ஜாதி, மதுவற்ற- நம் வாழ்வுரிமைகளுக்காக அனைத்து மாச்சரியங்களையும் களைந்து தமிழர்களாக ஓரணியில் திரளுகிற தமிழினமாக ஒற்றுமையுடனும் ஓர்மத்துடனும் எழுந்து நிற்போம் என்று அதில் வேல்முருகன் கூறியுள்ளார்.