ஜெ., உடல்நலம் பற்றி வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்: அப்பல்லோவில் வெங்கையாநாயுடு
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் அவருடன் இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.
மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதற்காக நாள்தோறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்தேன். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் விவரித்தார்கள்.
அவருடைய உடல்நிலை தேறிவருவதாகவும் தெரிவித்தனர். சிகிச்சைக்கு முதல்வர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில், தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். முதல்வர் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக மக்களுக்கு சேவையாற்ற அவர் மீண்டு வருவார்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.