மக்களை மீட்கும் ஆட்சி தமிழகத்தில் ஏற்படவில்லை: சுதந்திர தின வாழ்த்தில் விஜயகாந்த் 'சுறுக்'
சென்னை: சுதந்திரதினத்தை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று 69ம் ஆண்டிலே இந்தியா அடியெடுத்து வைக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி, இந்திய மக்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமைகண்டு, இந்த இனிய நாளை சுதந்திர திருநாளாக கொண்டாடி வருகிறோம்.
விடுதலை பெற்று ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் வறுமைநிலை மாறவில்லை. மதுவின் கோரப்பிடியில் இருந்து மக்களை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, வறுமை கோட்டிற்குகீழ் மக்களே இல்லை என்கின்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க தேமுதிக தொடர்ந்து பாடுபட்டுவருகிறது.
லஞ்சம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தண்ணீர் பஞ்சம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் ஆட்சி தமிழகத்தில் ஏற்படவில்லை.
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், எல்லைப்புறங்களில் எதிரிகளின் தாக்குதல், தமிழக மீனவர்கள் தாக்குதல், உள்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை இந்தியா இன்னும் சந்தித்துவருகிறது.
வருங்காலங்களில் நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு, வறுமை ஒழிந்திட இந்த சுதந்திரதினம் வழிவகுக்கட்டும். தேமுதிக சார்பில் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.