தமிழக அரசிடம் காசு இல்லையா: கேப்டன் டிவியில ப்ரீயா காட்டுறேன்.... விஜயகாந்த் "ஆஹா"!
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாத அளவுக்கா தமிழக அரசு திவாலாகி விட்டது. வேண்டும் என்றால் எங்களது கேப்டன் டிவியில் இலவசமாகவே ஒளிபரப்ப நாங்கள் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தன் பங்குக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அந்த அறிக்கையிலிருந்து...
பல கோடி ரூபாய் திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறும் தமிழக அரசு, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நிதியில்லை என்று கூறியிருப்பதன் மூலம் இந்த அரசை திவாலான அரசு என்று கூறலாமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசுக்கு நிதியில்லை என்றால், நான் பங்குதாரராக இருக்கின்ற கேப்டன் தொலைக்காட்சி, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யத் தயாராக இருக்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா.
சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளையும், விவாதங்களையும் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்தையும் ஒளிபரப்பியிருந்தால் இந்த கேள்விக்கு இடம் இருந்திருக்காது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.