"ஆட்ட கடுச்சு, மாட்ட கடுச்சு" கடைசியாக மனிதனை கடித்த கதையாக.. ரயில் கொள்ளை குறித்து விஜயகாந்த்
சென்னை: "ஆட்ட கடுச்சு, மாட்ட கடுச்சு" கடைசியாக மனிதனை கடித்த கதையாக ரயில் கொள்ளை நிகழ்ந்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலத்திலிருந்து சென்னை கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கியின் பணம் சுமார் 372 கோடி ரூபாய் இரயிலில் கொண்டு வரும் பொழுது, சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த செய்தி ஒட்டு மொத்த தமிழக மக்களையே வேதனைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு நிகழ்வாக இதை பயங்கர சம்பவமாக கருதப்படுகிறது. இதுவரைக்கும் யார் கொள்ளையடித்தார்கள், எந்த இடத்தில் கொள்ளையடித்தார்கள், எப்படி கொள்ளையடித்தார்கள் என்ற பல கேள்விகளுக்கு விடையே தெரியாத அளவுக்கு மிகப்பெரிய சதியோடு செய்யப்பட்ட இந்த கொள்ளை சம்பவம், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை, இரயில்வே துறை, வங்கியின் நிர்வாகிகள் இவர்கள் மீது பல சந்தேகங்கள் கிளப்பும் அளவு இந்த நிகழ்வு நடந்துள்ளது.
எத்தனை கோடி திருட்டு?
இதுவரைக்கும் எத்தனை கோடி திருட்டு போயிருக்கிறது என்று அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆளும்கட்சியினுடைய நிர்வாக சீர்கேட்டால் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
காரணமே மது, வறுமைதான்
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, செயின் பறிப்புகள் என்று தொடந்து வண்ணம் இருக்கையில், இந்த இரயில் கொள்ளை என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், மது பழக்கம், வேறு மாநிலத்தவர்களை அதிகமாக தமிழகத்தில் வேலையில் அமர்த்துவதன் விளைவு, அவர்களை பற்றி சரியான விவரங்களையோ, கண்கானிப்புகளையோ முறையாக இந்த அரசு எடுக்காததன் விளைவாக இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
எனவே இந்த அரசு இந்த சம்பவத்தில் கவனம் செலுத்தி, கொள்ளையடித்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரைக்கும் நடக்காத சம்பவமாக இரயிலில் மேற்கூரையை வெட்டி எடுக்கப்பட்டு, உள்ளே புகுந்து கொள்ளையடித்த சம்பவத்துக்காக அதை கவனிக்காத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் இந்த அரசு எடுக்க வேண்டும்.
கடும் தண்டனை
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கும், எப்பொழுதும் நடக்காத வண்ணம் ஏற்படுத்தி, தவறுகள் நடக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் அரசு வழங்கிட வேண்டும்.
ஆட்ட கடுச்சு.. மாட்ட கடுச்சு
ஆட்ட கடுச்சு, மாட்ட கடுச்சு கடைசியாக மனிதனை கடித்த கதையாக, சிறு கொள்ளையில் ஆரம்பித்து, இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது, தமிழகத்தையே தலைகுனிய செய்திருக்கிறது.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.