கள்ளக்குறிச்சிக்கு பாமக வேட்பாளரை அறிவித்ததால் கடும் கோபத்தில் விஜயகாந்த்!
கிருஷ்ணகிரி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனக்கு பாஜக ஒதுக்கிய கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளரை அறிவித்ததால் கோபமடைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், கிருஷ்ணகிரி பிரசாரத்தின்போது பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்காமல் பொத்தாம் பொதுவாக பேசி விட்டுப் போனார் விஜயகாந்த்.
கிருஷ்ணகிரி பாமக வேட்பாளராக ஜி.கே.மணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியையும் பாஜக, பாமகவுக்கே கொடுத்துள்ளது. முதலில் இந்தத் தொகுதியை விஜயகாந்த் கேட்டு வந்தார். ஆனால் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுவதால் இது தங்களுக்கே வேண்டும் என்று பாமக கூறி விட்டது. இதையடுத்து விஜயகாந்த் இத்தொகுதியை விட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில், அதிரடியாக நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளரை அறிவித்தார். அதேபோல தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட சேலத்தில் முன்பே அறிவித்தபடி பாமக வேட்பாளராக அருளே தொடர்வார் என்றும் அறிவித்தார்.
இந்த இரு தொகுதிகளில் ஒன்றில்தான் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ராமதாஸின் பேச்சும், அறிவிப்பும், சிங்கம், சிறுநரி என்று அவர் கூறிய உவமானங்களும் விஜயகாந்த்தை கோபப்படுத்தியுள்ளதாம்.
இது நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த விஜயகாந்த்தின் தேர்தல் பிரசாரத்தின்போதும் எதிரொலித்தது. நேற்றைய பிரசாரத்தின்போது மருந்துக்குக் கூட பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கோரவில்லை. மணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் கேட்கவில்லை.
விஜயகாந்த்தின் பேச்சிலிருந்து...
அதிமுகதான் மக்கள் விரோத ஆட்சி
தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா சொல்கிறார். அதிமுக தான் மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளது. அதை முடிவுக்கு கொண்டு வர மக்களாகிய உங்களால் தான் முடியும்.
ஊழலை ஒழிக்கத்தான் போராடுகிறோம்
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க நாங்கள் போராடுகிறோம். இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.
ஜெயலலிதாவிடம்தான் கருப்புப் பணம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். யாரிடம் கருப்பு பணம் உள்ளது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.
எனக்கு சாதி கிடையாது
எனக்கு சாதி, மதம் கிடையாது. இந்தியா வல்லரசு ஆக வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தை நல்லரசு ஆள வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வெளிச்சம் வந்து விட்டதா
திமுக ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாடு இருண்டு விட்டதாக அதிமுக கூறியது. இப்போது வெளிச்சம் வந்து விட்டதா? ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும் போது மட்டும், போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு வழங்குகிறார்கள். 3 கிமீ தூரத்திற்கு முன்பே சீல் வைத்துவிடுகிறார்கள். போலீசாரின் நடவடிக்கை குறித்து நான் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளேன் என்றார் விஜயகாந்த்.
பாமகவுக்கு வாக்கு கேட்கவில்லை
பிரசாரத்தில் பாமகவுக்கு வாக்கு சேகரிக்க மறுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள், மோடியைப் பிரதமராக்குங்கள் என்று மட்டும் விஜயகாந்த் பேசிச் சென்றதால் கூட்டணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நேற்றைய விஜயகாந்த் பிரசாரத்தின்போது பாமகவினரின் கொடிகளையும் காண முடியவில்லை.