ஆர்.கே.நகர் கைவிட்டதால் கன்னியாகுமரி பக்கம் கவலையைத் திருப்பும் விஷால்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காட்டிலும் குமரி மீனவர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துவதுதான் தற்போது முக்கியம் என்று நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காட்டிலும் மிகப் பெரிய விவகாரமான குமரி மீனவர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துவதுதான் தற்போதைய தருணத்தில் முக்கியமானது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் வேட்புமனுவும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனுவை பரிசீலித்த அதிகாரிகள் ரத்து செய்தனர்.
முன்மொழிந்தவர்கள் ஜகா வாங்கினர்
ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதற்கு முன்மொழிந்தவர்கள் என்று கூறப்படும் இருவர் வேட்புமனுவில் உள்ளது தங்களின் கையெழுத்து இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது.
முட்டி மோதிய விஷால்
தமது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையம் வரை விஷால் முட்டி மோதினார். ஆனால் தேர்தல் ஆணையமோ தேர்தல் அதிகாரி எடுத்தது இறுதியான முடிவு என்றும் எதுவாக இருந்தாலும் தேர்தல் அதிகாரியிடமே முறையிடலாம் என்று கைவிரித்து விட்டது.
இல்லை என மறுப்பு
தேர்தலில் முன்மொழிந்தவர்களை தேர்தல் அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறு விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காணவில்லை என்றார் விஷால். ஆனால் ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கலின் போது விஷாலை முன்மொழியவில்லை என்று சுமதி, தீபன் ஆகியோர் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது விஷாலின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
போட்டியிடும் முடிவு சொந்தமாக எடுத்தது
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எனது சொந்த விருப்பத்தின்படியாகும். இதற்கு பின்னால் அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ இல்லை.
|
கவனம் செலுத்த வேண்டும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விட தற்போது முக்கிய பிரச்சினைகள் உள்ளன.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மீனவர்களுக்கு நாம் ஆதரவளித்து அவர்களின் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.