விவேக் வீட்டிலிருந்து வெளியே வந்த ஐடி அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறு செய்த ஆதரவாளர்கள்
மகாலிங்கபுரத்தில் சோதனை நடத்திய வருமான வரி அதிகாரிகளை விவேக் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை: மகாலிங்கபுரத்தில் சோதனை நடத்திய வருமான வரி அதிகாரிகளை விவேக் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். சோதனையை முடித்துவிட்டு அதிகாரிகள் திரும்பும் போது அவர்களை வெளியேற விடாமல் விவேக் ஆதரவாளர்கள் பிரச்சனை செய்தனர்.
சசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் இன்று இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேர்த்தில் 200க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை இன்னும் முடியாமல் நடந்து கொண்டு இருக்கிறது.
காலையில் இருந்து ஜெயா டிவியில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசி மகன் விவேக்தான் இதை நிர்வகித்து வருகிறார். மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சோதனை நாளையும் தொடரும் என கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக விவேக் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் மகாலிங்கபுரத்தில் இருக்கும் விவேக் இல்லத்தில் சோதனை முடித்துவிட்டு திரும்பிய அதிகாரிகளை விவேக் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு இருக்கின்றனர். மேலும் அவர்களை அந்த இடத்தைவிட்டு வெளியேற விடாமல் சண்டையிட்டு வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.