ஜாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்: தியாகி லட்சுமிகாந்தன்
நெல்லை: போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க இளைஞர்கள் ஜாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி தெரிவித்தது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் வாக்காளர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக 90 வயதான தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி கலந்து கொண்டார்.
கலெக்டர் கருணாகரன் தலைமை ஏற்றி உறுதிமொழி வாசிக்க மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கனவே விண்ணப்பித்த மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்போது லட்சுமிகாந்தன் பாரதி பேசியதாவது,
சுதந்திர போராட்டத்தில் நெல்லை மாவட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நான் எங்கு போராடி சிறை சென்றேனோ அந்த மாவட்டத்திலேயே எனக்கு கலெக்டர் பணி செய்யும் வாய்ப்பு சுதந்திரத்திற்கு பின்பு கிடைத்தது. 90 வயதை கடந்த எனக்கு இருக்கும் ஒரே விருப்பம் போராடி பெற்ற சுதந்திரத்தை காக்க தேர்தலில் ஜாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறை மாணவ, மாணவிகள் ஜனநாயக கடமையை மறக்காமல் செய்ய வேண்டும். மேலும் கிராமத்தினரிடம் வாக்களிக்கும் கடமையை தவறாமல் செய்ய சொல்ல வேண்டும். ஒரு நாளாவது நீங்கள் கதர் ஆடையை அணிந்து வர வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகளில் பெரும்பாலானோர் கைத்தறி ஆடைகளில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தியாகியின் பேச்சு மாணவிகளிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.