ஒரு பக்கம் கடையடைப்பு, மறுபக்கம் கடை உடைப்பு! தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

தமிழகத்தில் கடை அடைப்பும், கடை உடைப்பும் அடுத்தடுத்து நடந்திருக்கிறது. ஒன்று விவசாயத்தை பிழைப்பதற்காகவும் மற்றது சாராயத்தை ஒழிப்பதற்காகவும் நடத்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்து பெண்களுக்கு ஒருபக்கம் தண்ணீர் கிடைக்கவில்லையே என்ற பிரச்சினை, இன்னொரு பக்கம் "தண்ணி" தாராளமாக இருக்கிறதே என்ற பிரச்சினை! இரண்டினாலும் பாதிக்கப்படுவது பெண்கள் என்பது மட்டுமே ஒற்றுமை. இரண்டும் தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது என்பது கவனிக்கத் தக்கது.

விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்து திமுக தலைமையிலான பல கட்சிகள் ஏப்ரல் 25ம் தேதி முழுநாள் கடையடைப்பை நடத்தினர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது உண்மைதான். ஆனால், விவசாயிகளின் பிரச்சினை இதனால் தீருமா என்பது கூற முடியவில்லை.

அரசியல் போராட்டங்கள்

அரசியல் போராட்டங்கள்

டெல்லியில் நீண்ட நாட்கள் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கும் பலன் கிடைக்கவில்லை. இத்தகைய போராட்டங்கள் அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்பது வெளிப்படை. போராட்டம், கடையடைப்பு ஆகியவை ஏதோ ஒரு நாள் சம்பிரதாயத்துக்காக நடத்தி, வெற்றி வெற்றி என்று தனக்கு ஆதரவான ஊடகங்களில் பிரசாரம் செய்து திருப்தி அடைந்து ஓய்வதுதான் நடக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஆனால், ஒருமித்த உணர்வுடன் மக்களும், வணிகர்கள் எனப் பல தரப்பட்டவர்களும், கட்சி அரசியலை மறந்துவிட்டு ஒன்றிணைந்து போராடும்போதுதான் வெற்றி கிடைக்கும் என்பதை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் உணர்ந்துவிட்டோம். எனவே, கடையடைப்பு என்றால் ஒரு நாள் விடுமுறை, ஒரு நாள் செய்தி, விளம்பரம் என்ற நோக்கம் இல்லாமல் தன்னிச்சையாக செய்யப்பட வேண்டும். இப்போது நடந்த கடையடைப்பு கூட கூட்டணிக்கானது என்பதை எல்லோரும் அறிவர்.

கடை உடைப்பு

கடை உடைப்பு

மதுபானக் கடைகளுக்கு எதிராக பெண்களும் பொதுமக்களும் நடத்தும் ஆர்ப்பாட்டம் அத்தகையது அல்ல. நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவற்றை அகற்றிய தமிழக அரசு அதே கடைகளை ஊருக்கு மத்தியில் நடத்துவதற்கு முயலும் அடாவடித் தனத்தால் ஏற்பட்ட கோபம்தான் கடை உடைப்புப் போராட்டம்!

மோசடி

மோசடி

"அதிலும் நெடுஞ்சாலைகளில்தானே மதுக்கடைகளை வைக்கக் கூடாது, நெடுஞ்சாலைகள் என்பதை உள்ளூர்ச் சாலைகள் என்று மாற்றிவிடுகிறோம்" என்று அகம்பாவத்துடன் ஆட்சி நடத்தப்படுவது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. பேருந்தில் டிக்கெட் வாங்காமல் ஏமாற்றுவதற்காக, வளர்ந்த சிறுவனுக்கு காற்சட்டை அணிவித்து, "வயது ஆகவில்லை" என்று கூறி அரை டிக்கெட் வாங்கும் மோசடிச் செயலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். நல்ல காலமாக நீதிமன்றம் அதற்கும் தடை விதித்துவிட்டது.

கேரளாவில் மது விலக்கு தளர்வு

கேரளாவில் மது விலக்கு தளர்வு

இதே தினம் ஏப்ரல் 27, 1967ம் ஆண்டு மதுவிலக்கைக் கேரளத்தில் அப்போதைய முதல்வர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாடு தளர்த்தினார். ஆனால், அப்போது கூட, 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மதுபானத்தை விற்பது தண்டனைக்குரியது எனவும், குறிப்பிட்ட இடங்களில் மதுக்கடைக்ளை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது அரசு. நாட்டு மதுபானங்களான கள்ளுக்கு அங்கே தடையில்லை. அதன் வருமானம் விவசாயிக்குப் போய்ச்சேரும் என்பது கவனிக்கத் தக்கது.

அண்ணா உறுதி

அண்ணா உறுதி

மதுபானக் கடைகளை ஆரம்பத்தில் உடைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. மதுவிலக்கில் தீவிரம் காட்டி அதை செயல்படுத்தியவர் மூதறிஞர் இராஜாஜி. 1967ம் ஆண்டு கேரளத்தில் மதுவிலக்குத் தளர்த்தப்பட்டபோது, தமிழகத்தில் ஆட்சி அமைத்த அண்ணா மதுவிலக்கு தளர்த்தப்பட மாட்டாது. அதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டோம் என்று உறுதியாக அறிவித்தார்.

மதுவிலக்கை தளர்த்திய கருணாநிதி

மதுவிலக்கை தளர்த்திய கருணாநிதி

ஆனால், ஒரு தலைமுறை மதுவை ருசிக்காமல் இருந்த தமிழனுக்குத் திறந்துவிட்டவர் மு. கருணாநிதி. வருவாயைக் காரணம் காட்டி, 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி திறந்துவைத்தார். அதற்கு முன் தள்ளாத வயதில் கொட்டும் மழையில் கருணாநிதி வீடு தேடி, "மதுவிலக்கைத் தளர்த்த வேண்டாம். மதுபானக் கடைகளைத் திறக்கச் செய்யவேண்டாம்" என்று இராஜாஜி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதைப் புறந்தள்ளினார். அக்காலப் புராணத்தில் ஒரு கதை வரும். ஓர் அரசன் வீட்டில் மாம்பழத்தில் ஒரு புழு இருக்கும். அது வெறும் புழுதானே என்று அலட்சியம் செய்துவிடுவான். அந்தப் புழு மிகப் பெரிய விஷம்பாம்பாக வளர்ந்து அவனை அழித்துவிடும். அப்படி ஆகிவிட்டது, இந்த மதுபானம். திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களே கடையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் கடும் கோபம்

பெண்கள் கடும் கோபம்

முதலிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்காததால், ஆத்திரமடைந்த மக்கள் அந்தக் கடையை அடித்து நொறுக்கினர். கடையில் இருந்த மதுபாட்டில்களும் உடைக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் மாறியது. ஒரு டாஸ்மாக் மது கடை பாருடன் செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகில் உள்ள இந்த மது கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டும் பலன் இல்லாததால் 100-க்கும் மேற்பட்டோர் மக்களே திரண்டு திருப்பூர் - காங்கயம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் நடந்தும் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் திடீரென மதுக்கடை, பாரை நோக்கி ஓடினர். அப்போது பெண்கள் மதுக்கடையின் முன்பகுதியை அடித்து நொறுக்கினர். மேலும் மதுக்கடையை ஒட்டி இருந்த பாரையும் அடித்து நொறுக்கினர். பாருக்குள் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர்.

மக்கள் எழுச்சி தோற்காது

மக்கள் எழுச்சி தோற்காது

கடந்த ஜனவரியில் வட சென்னையில் இதைப் போன்ற தாக்குதல் நடந்திருக்கிறது. வியாசர்பாடியில் நான்கு கடைகளையும், அரும்பாக்கத்தில் ஒரு கடையையும் மக்களே அடித்து நொறுக்கியுள்ளனர். மக்கள் எழுச்சியுடன் நடத்தப்படும் எந்தப் போராட்டமும் தோற்றதாகத் தெரியவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்து, மதுக்கடைகளைத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பெண்கள் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் மாற்றங்களுக்குப் பெண்களின் எழுச்சியே பின்னணியில் இருந்தன என்பதை மறந்துவிடக் கூடாது. மதுபானம் அருந்திய மனிதன் வேண்டுமானால் நினைவிழிந்து போகலாம். மதுக்கடையை நடத்தும் அரசு இத்தகைய உண்மைகளை மறந்துவிட்டு, நினைவிழந்து நடக்கக் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+