நெல்லையில் குடிநீர் நிறுவனங்கள் திடீர் ஸ்டிரைக்: நுகர்வோர்கள் அவதி
நெல்லை: பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடியில் 60க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் பல குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இவர்கள் வரைமுறை இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சனையை தாமே சுயமாக எடுத்து கொண்டு வழக்கு பதிவு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் குடிநீர் நிறுவனங்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றில் பல நிறைவேற்ற முடியாதவை என்று குடிநீர் நிறுவனங்கள் நிபந்தனைகளை தளர்த்த கோரின.
இவற்றில் 252 நிறுவனங்கள் வறண்ட பகுதியில் நிலத்தடி நீரை எடுப்பதாக புகார் எழுந்தது. அந்த நிறுவனங்களுக்கு நீதிபதி தடை விதித்தார். பசுமை தீர்ப்பாய உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் குடிநீர் நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் வியாழக்கிழமை மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குடிநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கபபட்டுள்ளது.
நெல்லை மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஆர்யா பாலசுப்பிரமணியன் இதுகுறித்து தெரிவிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் குடிநீர் கேன்கள் விற்பனையாகிறது. தற்போது வேலை நிறுத்தத்தில் சுமார் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டல்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் கேன் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. நிபந்தனைகளை தளர்த்தும் வரை போராட்டம் தொடரும் என்றார்.